கனடாவில் சிறுமிகளை ஏமாற்றி ஆபாசப் படங்களை பெற்ற இளைஞர் கைது
கனடாவில் சமூக ஊடகங்கள் மூலம் இரண்டு சிறுமிகளை ஏமாற்றி, அவர்களிடம் இருந்து ஆபாசப் படங்களைப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2025-ஆம் ஆண்டின் பிற்பகுதியில், டர்ஹாம் பிராந்திய காவல்துறையின் குழந்தைகள் சுரண்டல் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த விசாரணை தொடங்கப்பட்டது.
ரெடிட் மற்றும் ஸ்னெப்செட் ஆகிய சமூக ஊடகத் தளங்கள் மூலம் 12 மற்றும் 13 வயதுடைய இரு சிறுமிகளுடன் அந்த நபர் தொடர்பில் இருந்ததாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் சமூக ஊடக தளங்களில் சிறுமிகளை வற்புறுத்தி ஆபாசப் படங்களை அனுப்ப வைத்ததாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
2026-ஆம் ஆண்டில், விட்பி பகுதியில் உள்ள சந்தேக நபரின் குடியிருப்பில் பொலிஸார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, விட்பியைச் சேர்ந்த மனு சுகுணகுமார் என்பவர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்த பல மின்னணு சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மனு சுகுணகுமார் மீது பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையாக இருக்கும் நோக்கில் 16 வயதுக்குட்பட்டோரை ஏமாற்றியமை, ஆபாசப் பொருட்களை தயாரிக்கும் நோக்கில் 18 வயதுக்குட்பட்டோரை ஏமாற்றியது, பாலியல் தொடுதல் நோக்கத்திற்காக 16 வயதுக்குட்பட்டோரைத் தூண்டியது , அனுமதியின்றி அந்தரங்கப் படங்களை வெளியிட்டது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் இன்னும் கூடுதலான சிறுமிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனப் புலனாய்வாளர்கள் கருதுகின்றனர்.
இது குறித்துத் தகவல் தெரிந்தவர்கள் யாராக இருந்தாலும் டர்ஹாம் பிராந்திய பொலிஸாரைத் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.