இலங்கையில் இந்திய இராணுவத்தை தரையிறக்குமாறு கோரிக்கை
இலங்கையில் நேற்று ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக இந்திய மூத்த அரசியல்வாதியான சுப்பிரமணியன் சுவாமி சமூக ஊடகங்களில் வெளியிட்ட செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) எம்பி சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பதிவில், “அரசியலமைப்புச் சட்டத்தை மீட்டெடுக்க இந்திய இராணுவத்தை இந்தியா அனுப்ப வேண்டும். தற்போது இந்திய எதிர்ப்பு வெளிநாட்டு சக்திகள் மக்களின் கோபத்தை சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இது இந்தியாவின் தேசிய பாதுகாப்பை பாதிக்கிறது” என குறிப்பிட்டிருந்தார். அவர் தனது பதிவில் இலங்கையை நேரடியாகக் குறிப்பிடாவிட்டாலும், இலங்கையில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை தொடர்பில் அவர் கருத்து வெளியிடுவதாக சமூக ஊடகப் பாவனையாளர்கள் பலரும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய கூட்டாளியாக அறியப்பட்ட இந்திய அரசியல்வாதியான சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் செய்தியால் பல இலங்கை சமூக ஊடக பயனர்களிடமிருந்து பின்னடைவைப் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
India must send in the Indian Army to restore Constitutional sanity. At present anti Indian foreign forces are taking advantage of people’s anger. This affects India’s national security
— Subramanian Swamy (@Swamy39) May 10, 2022
இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்ட அமைதியின்மை குறித்து பாஜக மூத்த அரசியல்வாதி குறிப்பிட்டதாக பல இந்திய ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.
மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் கொழும்பில் நேற்று அமைதியான முறையில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியது நாடு முழுவதும் பரவலான கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து மகிந்த ராஜபக்ச தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
எனினும், பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்ட கொந்தளிப்பை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் வாதிகள், பொலிஸார் மற்றும் அரசாங்கத்துடன் தொடர்புடையவர்கள் மீது காட்டியிருந்தனர்.