நிறம் குறித்து பேசியவர்களில் அரசி எலிஸபெத்- இளவரசர் பிலிப் இல்லை
பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மேர்கெல் தம்பதிக்கு பிறக்கும் குழந்தையின் தோல் என்ன நிறமாக இருக்கும் என்பது குறித்த கலந்துரையாடலில் ஈடுபட்ட அரச குடும்பத்தவர்களில் அரசி 2 ஆம் எலிஸபெத்தோ அல்லது அவரின் கணவர் இளவரசர் பிலிப்போ இல்லை என இளவரசர் ஹரி தெளிவுபடுத்தியதாக தொலைக்காட்சி நட்சத்திரம் ஒப்ரா வின்ப்றே தெரிவித்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சி நட்சத்திரம் ஒப்ரா வின்பிறேவுக்கு இளவரசர் ஹரி, மேகன் மேர்கெல் தம்பதியினர் வழங்கிய நேர்காணல் அமெரிக்காவின் சிபிஎஸ் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகியது. 2019 மார்ச் 6 ஆம் திகதி தனது மகன் ஆர்ச்சி பிறப்பதற்கு முன்னர் அக்குழந்தை என்ன நிறமாக இருக்கும் என்பது குறித்து அரச குடும்பத்தினரிடையே உத்தியோகபூர்வமாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும், அக்குழந்தை எந்தளவு கறுப் பாக இருக்கும் என அரச குடும்பத்தவர் ஒருவர் கூறியதாகவும் மேற்படி நேர்காணலில் மேகன் கூறினார். எனினும் அவர் யார் என்பதை மேகன் கூற மறுத்துவிட்டதுடன் அது அவர்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் மேகன் கூறினார்.
இதேவேளை மேகன் மேர்கெலின் தந்தை வெள்ளையினத்தவர். தாய் கறுப்பினத்தவர் ஆவார். இளவசர் ஹரியுடன் அவரின் குடும்பத்தினர் நடத்திய உரையாடல்கள் குறித்த இவ்விடயங்கள் ஹரி மூலம் தனக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறிய நிலையில் இவ்விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, இந்நிலையில், தனது குழந்தையின் நிறம் என்னவாக இருக்கும் என கலந்துரையாடியவர்கள் அரசி 2 ஆம் எலிஸபெத்தோ அவரின் கணவர் இளவரசர் பிலிப்போ அல்லர் இளவரசர் ஹரி கூறியுள்ளார் என ஒப்ரா வின்ப்றே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சிபிஸ் தொலைக்காட்சிக்கு திங்கட்கிழமை அளித்த செவ்வியில் அவர் கூறுகையில், ‘அந்த கலந்துரையாடலில் பங்குபற்றியவர்கள் யார் என இளவரசர் ஹரி என்னிடம் கூறவில்லை. ஆனால் தனது பாட்டியோ தாத்தவோ இதில் பங்குபற்றவில்லை என என்பதை எனக்கு வாய்ப்பு கிடைத்தால் பகிர்ந்துகொள்ளுமாறு அவர் விரும்பினார்’ என்றார்.
ஆர்ச்சியின் நிறம் குறித்து பேசியர்கள் யார் என்பதை அறிவதற்கு கெமராவுக்கு முன்னாலும் அப்பாலும் தான் முயன்றபோதிலும் இளவரசர் ஹரி விபரிக்கவில்லை என்றார். தோல் நிறம் குறித்த விடயத்தை கேட்டபோது தான் அதிர்ச்சியடைந்ததாகவும் ஒப்ரா வின்ப்றே கூறியுள்ளார்.
பிரிட்டனிலிருந்து வெளியேறியமைக்கு இனவாதம் காரணமா என ஒப்ரா வின்ப்றே கேட்டபோது, நாம் வெளியேறியதில் டெப்லொய்ட் பத்திரிகைளின் இனவாதம் பெரும் பங்கு வகித்த என இளவரசர் ஹரி பதிலளித்தமை குறிப்பிடத்தக்கது.