தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்கள் வேலையை விட்டு நீக்கப்படுவார்கள்: வெளியான அறிவிப்பு
எதிர்வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்கள் கட்டாயம் வேலையை விட்டு நீக்கப்படுவார்கள் என University Health Network அறிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை இந்த விவகாரம் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் UHN இதை உறுதி செய்துள்ளது. இதுவரை 900 ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான ஆவணங்களை தங்களிடம் சமர்ப்பிக்கவில்லை எனவும், இதனால் அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் என்றே கருதப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளது.
செப்டம்பர் 8ம் திகதிக்குள் முதல் டோஸ் போட்டுக்கொள்ள UHN நிர்வாகிகள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், இரண்டாவது டோஸ் தடுப்பூசியானது அக்டோபர் 8ம் திகதி போட்டுக்கொள்ளலாம்.
தடுப்பூசி தொடர்பில் உரிய விளக்கமளிக்க தாங்கள் தயாராக இருப்பதாகவும், சுகாதாரத்துறையில் பணியாற்றுபவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும், நோயாளிகள் மற்றும் சக ஊழியர்களின் மீதும் அக்கறை வைக்க வேண்டியது அவசியம் எனவும் UHN சுட்டிக்காட்டியுள்ளது.
அக்டோபர் 8ம் திகதிக்கு பின்னர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் கண்டிப்பாக ஊதியமற்ற விடுப்புக்கு இரண்டு வார காலம் அனுப்பப்படுவார்கள் எனவும், இந்த இரண்டு வார காலத்தில் அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை எனில், வேலையை விட்டு நீக்கப்படுவார்கள் என UHN நிர்வாகம் உறுதிபட தெரிவித்துள்ளது.
தடுப்பூசி இதுவரை போட்டுக்கொள்ளாதவர்கள் தங்கள் கொரோனா சோதனை முன்னெடுத்த தரவுகளை சமர்ப்பிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.