கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 82 பேருக்கு நேர்ந்த சோகம்!
ஈராக்கில் கொரோனா நோயாளிகளுக்கான ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 82 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கொரோனா வைரஸ் பரவல் வேகம்
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈராக்கில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவல் வேகம் எடுக்க தொடங்கியது.
அங்கு கடந்த சில வாரங்களாக தினந்தோறும் ஆயிரக்கணக்கானோருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் அந்த நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது.
அதேபோல் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இதனிடையே வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஈராக்கில் உள்ள ஆஸ்பத்திரிகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.
அந்த வகையில் தலைநகர் பாக்தாத்தில் உள்ள இபின் அல்-காதிப் என்கிற ஆஸ்பத்திரியில் 100-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர்.
ஆக்சிஜன் சிலிண்டர்கள் வெடித்து தீப்பிடித்தது
இந்தநிலையில் இந்த ஆஸ்பத்திரியின் 2-வது தளத்தில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் கொரோனா நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் அளிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் நேற்றுமுன்தினம் இரவு திடீரென வெடித்துச் சிதறியது.
இதனால் அவசர சிகிச்சை பிரிவில் தீப்பற்றி எரிந்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ கண்ணிமைக்கும் நேரத்தில் ஆஸ்பத்திரியின் அடுத்தடுத்த தளங்களுக்கு வேகமாக பரவியது.
இதனால் ஆஸ்பத்திரியில் பெரும் பதற்றமும் பீதியும் உருவானது. நோயாளிகள் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். ஆனால் அதற்குள் தீ நாலாபுறமும் சூழ்ந்துகொண்டதால் பலர் உள்ளே சிக்கிக்கொண்டனர்.
இந்த தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர்.அவர்கள் விடிய விடிய போராடி நேற்று அதிகாலை தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
82 பேர் உடல் கருகி சாவு
எனினும் தீயின் கோரப்பிடியில் சிக்கி 82 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு ஆம்புலன்சுகள் மூலம் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
இதனிடையே இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள அந்த நாட்டின் பிரதமர் முஸ்தபா அல் காதிமி இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தி இதற்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்தி தக்க தண்டனை வழங்க செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த ஆஸ்பத்திரியின் நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளை உடனடியாக கைது செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல் ஈராக் அரசின் மனித உரிமைகள் ஆணையம் இந்த சம்பவம் கொரோனாவால் உடைந்து போன நோயாளிகளுக்கு எதிரான குற்றம் என சாடியது.