10 கோடியை தாண்டிய மொத்த பாதிப்பு: அதிரும் ஐரோப்பா கண்டம்
ஐரோப்பா கண்டத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது உலக அளவிலான கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 3-ல் ஒரு பங்கை விட அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீப நாட்களாக ஓமிக்ரான் உட்பட கொரோனா பெருந்தொற்றின் புதிய உருமாற்றங்களால், ஐரோப்பா கண்டம் கொரோனா பாதிப்பின் மையமாக மாறியுள்ளது.
அட்லாண்டிக் கடற்கரையில் இருந்து அஜர்பைஜான் மற்றும் ரஷ்யா வரையிலான 52 நாடுகள் மற்றும் பிரதேசங்களை உள்ளடக்கிய இந்த கண்டத்தில் 2 ஆண்டுகளில் 10 கோடியே 753 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் பதிவான 28.82 கோடி கொரோனா பாதிப்புகளில் இது 3-ல் ஒரு பங்கை விட அதிகமாகும். கடந்த 7 நாட்களில் மட்டும் 49 லட்சத்திற்கும் அதிகமான பாதிப்புகள் பதிவான நிலையில், மொத்தமுள்ள 52 நாடுகளில் ஒரே வாரத்தில் 17 நாடுகளில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் மட்டும் ஒரு வாரத்தில் 10 லட்சம் கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல் ஐரோப்பா கண்டத்தில் தினசரி இறப்புகளின் எண்ணிக்கை 3,413 என அதிகரித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் அதிகபட்ச தினசரி இறப்பு எண்ணிக்கை 5,735 என இருந்தது.
இந்த நிலையில், ஐரோப்பா கண்டத்தில் 65 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 61 சதவீதம் பேர் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.