தவிக்கும் இந்தியா; கை கொடுக்கும் ஐரோப்பா நாடுகள்!
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் நோயாளிகளுக்கான தேவையான ஆக்சிஜனை பூர்த்தி செய்ய உலக நாடுகள் முன்வந்துள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸின் 2வது அலை ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது.
நாளொன்றுக்கு 3 லட்சத்து 32 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிதுக்கப்பட்டு வருவதுடன் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். நாள்தோறும் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படுவதால், மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க போதிய இடமில்லாமல் பல்வேறு மாநிலங்கள் தவிக்கின்றன.
அதோடு , ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கொத்து கொத்தாக மடியும் அவல நிலையும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியாவுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்க ஐரோப்பிய யூனியன், தென்கிழக்கு ஆசிய நாடுகள் முடிவு செய்துள்ளது. அத்துடன் கொரோனா சிகிச்சைக்கு தேவையான உபகரணங்களை அனுப்பி வைக்கவும் ரஷ்யா, சிங்கப்பூர், ஜப்பான், ஜெர்மனி, மலேசியா உள்ளிட்ட நாடுகள் முன்வந்துள்ளன.
அதன் முதற்கட்டமாக ஜெர்மனியில் இருந்து 23 நடமாடும் ஆக்சிஜன் ஆலைகளை இந்தியா கொள்முதல் செய்துள்ள நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் அவை இந்தியாவிற்கு வந்து விடும் என கூறப்படுகிறது.
இந்த நடமாடும் ஆக்சிஜன் ஆலைகளின் மூலம் ஒரு மணிநேரத்தில் 400 லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்க முடியும் என்றும், இந்தக் கருவிகளை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.