சரியான திசைக்கு திருப்பப்பட்டது சுயஸ் கால்வாயில் சிக்கிய எவர் கிவன் கப்பல்
எகிப்தின் சுயஸ் கால்வாயில் சிக்கிக்கொண்ட பிரம்மாண்ட சரக்கு கப்பலான ‘எவர் கிவன்’ மிதக்கும் நிலைக்குக் கொண்டுவரப்பட்டு, சரியான திசைக்கு திருப்பப்பட்டுள்ளது. 400 மீட்டர் நீளமுள்ள எவர் கிவன் மலேசியாவிலிருந்து நெதர்லாந்திற்கு செல்லும் வழியில் சுயஸ் கால்வாயில் சிக்கிக்கொண்டது. பனாமாவில் பதிவுசெய்யப்பட்ட இந்த கப்பல் ஜப்பானிய நிறுவனமான இமாபரி கப்பல் கட்டுமானத்திற்கு சொந்தமானது.
தைவான் நாட்டைச் சேர்ந்த ‘எவர் கிரீன் மெரைன்’ என்ற நிறுவனம் இக்கப்பலை இயக்கிவருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் சுயஸ் கால்வாயில் சிக்கிக் கொண்ட நிலையில் ஒருவாரம் மேற்கொண்ட மீட்புப் பணியின் விளைவாக கப்பல் பாதி மீட்கப்பட்டு தொடர்ந்து சுயஸ் கால்வாயில் கப்பல் மிதக்கத் தொடங்கியுள்ளதாக எகிப்து அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
அத்துடன் கப்பலில் இருந்தவர்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து சூயஸ் கால்வாயின் இரு முனைகளில் நிற்கும் சரக்குக் கப்பல்கள் விரைவில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுயஸ் கால்வாய் கப்பல் போக்குவரத்தை ஒழுங்கமைக்கும் கண்காணிக்கும் அதிகாரசபையும் எவர் கிவன் கப்பல் இப்போது ஓரளவு மிதந்து “சரியான திசையில்” திரும்பியுள்ளது என உறுதி செய்துள்ளது.
எனினும் கப்பல் போக்குவரத்து கண்காணிப்பு தளமான மேரி டிராஃபிக்.கொம், செயற்கைக்கோள் தரவு கப்பல் நகர்த்தப்பட்டிருப்பதைக் காட்டியது, ஆனால் “இன்னும் சில வேலைகள் உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதேவேளை சுயஸ் கால்வாயின் குறுக்காக ‘எவர் கிவன்’ கப்பல் தரை தட்டியதால் அந்த வழியாக செல்லும் பிற கப்பல்கள் செல்ல முடியாத நிலை உருவானதுடன் கிட்டத்தட்ட கால்வாயின் இருபுறம் 160 கப்பல்கள் செல்ல வழியின்றி நின்றதனால் பல ஆயிரம் கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கம் அடைந்துருந்தமை குறிப்பிடத்தக்கது.