ஒவ்வொரு பூக்களுமே பாடல் புகழ் கோமகன் கொரோனாவுக்கு பலி
சேரனின் ஆட்டோகிராஃப் படத்தின் தேசிய விருது பெற்ற ’ஒவ்வொரு பூக்களுமே’ பாடல் புகழ் கோமகன் கொரோனாவால் உயிரிழந்தார். கடந்த 2004 ஆம் ஆண்டு சேரன் இயக்கி, நடித்த ‘ஆட்டோகிராஃப்’ படத்தில் இடம்பெற்ற ’ஒவ்வொரு பூக்களுமே’ பாடலின் மூலம் உலகம் முழுக்க புகழ்பெற்றார் பாடகர் கோமகன்.
பரத்வாஜ் இசையில் இப்பாடலை எழுதிய பா.விஜய்க்கும், பாடகி சித்ராவுக்கும் தேசிய விருதுகள் கிடைத்திருந்தது. இப்பாடலில் நடித்ததோடு கடைசியில் உணர்வுப்பூர்வமாகப் ஓரிரு வார்த்தைகள் பாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் கோமகன். அத்துடன் கடந்த 2019 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதும் இவருக்கு கிடைத்திருந்தது.
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட ஆர்கெஸ்ட்ராவை வைத்திருந்த கோமகன் கடந்த ஆண்டு பரவிய கொரோனாவால் மேடை நிகழ்ச்சிகள் கிடைக்காமல் தனது குழுவோடு பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பாடகர் கோமகன் கடந்த 12 நாட்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பின்பு இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை அயனாவரத்தில் உள்ள ஐ.சி.எஃப் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அதிக மூச்சுத்திணறல் ஏற்பட்டு இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.