நடுவானில் விமானத்தின் கதவைத் திறந்த பயணியால் பரபரப்பு !
உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரை நோக்கி 89 பயணிகளுடன் தனியார் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று பயணித்துகொண்டிருந்தபோது விமானத்தின் 1சி இருக்கையில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் திடீரென எழுந்து அவசர கதவை திறக்க முயன்றுள்ளார்.
இதனை கண்ட பெண் விமான ஊழியர் ஒருவர் உடனடியாக அலறியபடி , சக பயணிகளின் உதவியுடன் அந்நபரை தடுத்து நிறுத்தியுள்ளார் . சம்பவம் தொடர்பில் உடனடியாக விமான கேப்டனுக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து , விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு நிலவரம் பற்றி கூறி தரையிறங்க வேண்டும் என கேப்டன் கோரியுள்ளார்.
இதன்பின்பு வாரணாசி விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. அதுவரை சக பயணிகள் அந்த நபரை பிடித்து வைத்திருந்தனர். இதனையடுத்து விமானத்தில் இருந்த பாதுகாப்பு பணியாளர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உதவியுடன் அந்த நபர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் .
குறித்த சம்பவம் விமானத்தில் இருந்த பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை குறித்த பயணியை இனி விமானத்தில் பறப்பதற்கு தடை விதிக்கும் பட்டியலில் வைத்திருப்பது பற்றி விமான நிறுவனம் ஆலோசித்து வருகிறது.