நடுவானில் கனேடியரால் ஏற்பட்ட பரபரப்பு! திசைமாறிய விமானம்
நடுவானில் விமானத்தின் கதவுகளைத் திறக்க முயன்ற கனடாவைச் சேர்ந்த நபர் வன்முறையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டதாக தெரியவருகின்றது. கனேடியர் ஒருவர் விமானத்தின் கதவை நடுவானில் திறக்க முயன்றதால், ரொறன்ரொவுக்குச் செல்லும் விமானம் ஐஸ்லாந்திற்குத் திருப்பிவிடப்பட்டது.
சம்பவம் குறித்து தெரியவருகையில், LOT Polish Airlines விமானம் 41 வியாழன் அன்று போலந்தின் வார்சாவில் இருந்து டொராண்டோவிற்கு பறந்து கொண்டிருந்த போது விமானம் புறப்பட்ட சில மணி நேரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமானப் பணிப்பெண் ஒருவர் கனேடிய பயணிக்கு மதுபானம் வழங்க மறுத்ததை அடுத்து இந்த மோதல் ஆரம்பமாகியதாக விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
"பின்னர் அந்த நபர் பின்பகுதிக்கு சென்று பணியாளர்களை நோக்கி கத்தினார்" என்று LOT போலிஷ் ஏர்லைன்ஸ் பிரஸ் அதிகாரி கிரிஸ்டோஃப் மொக்சுல்ஸ்கி தெரிவித்தார்.
அத்துடன் "பயணி ஒரு கேபின் குழு உறுப்பினரை அடிக்கவிருந்தார், ஆனால் சக பயணிகள் கூடி அவரை அமைதிப்படுத்த முயன்றனர்." பயணி மிகவும் ஆக்ரோஷமாக மாறியதால், பிற பயணிகள் , அந்த நபரை அடக்கியதாக மொக்சுல்ஸ்கி கூறினார்.
குறித்த பயணில் விமானப் பணிப்பெண்கள் மீது தண்ணீர் பாட்டில்களை வீசியதுடன் மற்ற பயணிகள் மீதும் எச்சில் துப்பிதோடில்லாமல் ஒரு கட்டத்தில் விமானத்தின் கதவுகளுக்கு ஓடி, அவற்றை நடுவானில் திறக்க முயன்றார்.
இறுதியில் அவர் தரையிறங்குவதற்காக மீண்டும் தனது இருக்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ரெய்காவிக்கில் விமானம் தரையிறங்கியதும், பொலிஸார் விமானத்தில் ஏறி அந்த நபரை கைது செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
பணியாளர் கட்டுப்பாடுகள் காரணமாக, விமானம் ரெய்காவிக் புறப்பட்டு வார்சாவுக்கு திரும்பியது என்று LOT Polish Airlines விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் சனிக்கிழமையன்று ரொறன்ரோ செல்லும் விமானத்திற்கு முன்னர் பாதிக்கப்பட்ட அனைத்து பயணிகளுக்கும் ஹோட்டல் அறைகள் வழங்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.