மரணதண்டனையே சிறந்தது... அமெரிக்க சிறையில் அடைபட்டிருக்கும் கனேடியரின் குமுறல்
நீளும் சிறைவாசத்தைவிட மரணதண்டனையை நிறைவேற்றுவதையே தாம் விரும்புவதாக அமெரிக்காவின் மொன்டானா மாகாண சிறையில் உள்ள கனேடியரான மரணதண்டனை கைதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆல்பர்ட்டா மாகாணத்தை சேர்ந்த Ronald Smith என்பவர் கொலைக்குற்றம் தொடர்பில் 1983ல் இருந்தே மொன்டானா மாகாண சிறையில் உள்ளார்.
2006ல் இருந்தே மொன்டானா மாகாண சிறைகளில் மரணதண்டனை நிறைவேற்றப்படாத நிலையில், 2015 முதல் மரணதண்டனையானது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நீளும் சிறைவாசத்தை விட மரணதண்டனையே தாம் தெரிவு செய்வேன் என ரொனால்ட் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மரணதண்டனை நிறைவேற்றும் பிரேரணை மாகாண சபையில் கொண்டுவந்த நிலையில், தோல்வி கண்டது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் மீண்டும் மரணதண்டனை தொடர்பான பிரேரணை கொண்டுவரப்படும் என்றே அவை உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 1982ல் ரோட்னி மன்ரோ மற்றும் ரொனால்ட் ஸ்மித் ஆகிய இருவரும் மொன்டானா மாகாணத்தில் இளைஞர்கள் இருவரை கொலை செய்துள்ளனர்.
மது மற்றும் போதைமருந்தின் தாக்கத்தாலையே இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. ஆனால் ஸ்மித் மற்றும் மன்ரோ ஆகிய இருவரும் வாகனம் திருட முயன்றதாக நீதிமன்றத்தில் நிரூபணமானது.
இதில் மரணதண்டனைக்கு விதிக்கப்பட்ட இருவரில் மன்ரோ கனடாவுக்கு மாற்றப்பட, பின்னர் 1998 முதல் அவர் சிறைதண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பம், ஸ்மித்துக்கு மரணதண்டனையை விரைவாக நிறைவேற்றும்படி அழுத்தமளித்து வருகிறது.