தென்னாபிரிக்காவில் சிக்கிய கனேடியர்களுக்கு ஒரு மகிழ்வான தகவல்
கொரோனா புதிய மாறுபாடான ஓமிக்ரான் தொற்று தொடர்பில் தெற்கு ஆபிரிக்காவின் 10 நாடுகளுக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கனேடிய அரசாங்கம் தற்காலிக விதிவிலக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.
தென்னாபிரிக்காவில் கொரோனா தொற்றின் புதிய மாறுபாடான Omicron கண்டறியப்பட்டதன் பின்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தெற்கு ஆபிரிக்காவின் 10 நாடுகளுக்கு நேரடி விமான சேவைகளை தடை செய்துள்ளது கனடா அரசாங்கம்.
இதனால் கனேடியர்கள் பலர் தெற்கு ஆபிரிக்க நாடுகளில் சிக்கிக்கொண்டதுடன், ஓமிக்ரான் பரவல் காரணமாக கனடாவுக்கு திரும்பவும் முடியாமல் போனது.
இந்த நிலையில், தற்போது கனேடிய அரசாங்கம் தற்காலிக விதிவிலக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில், பயணத்திற்கும் 48 மணி நேரம் முன்னர் அரசு அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களில் இருந்து PCR சோதனை முன்னெடுக்கப்பட்டு, கொரோனா பாதிப்பில்லை என்பதை உறுதி செய்துள்ளவர்கள் அடுத்த வாரத்தில் கனடா திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டிசம்பர் 13 அல்லது அதற்கு முன் புறப்படும் லுஃப்தான்சா விமானத்தில் ஜோகன்னஸ்பர்க் அல்லது கேப் டவுனில் இருந்து ஜேர்மனியின் பிராங்பேர்ட்டுக்கு கனேடியர்கள் பயணிக்கலாம்.
அங்கிருந்து லுஃப்தான்சா அல்லது ஏர் கனடா விமானத்தில் கனடா திரும்பலாம். இந்த வாய்ப்பை கனேடிய மக்கள் கட்டாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுகொண்டுள்ளனர்.
கொரோனா தொற்றின் புதிய வைகை மாறுபாடான ஓமிக்ரான் பரவலை தடுக்கும் நோக்கில் நவம்பர் 26ம் திகதி முதல் தெற்கு ஆபிரிக்க நாடுகளான பொஸ்வானா, எகிப்து, ஈஸ்வதினி, லெசோதோ, மலாவி, மொசாம்பிக், நமீபியா, நைஜீரியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய 10 நாடுகளுக்கு நேரடி விமான சேவை மற்றும் பயணத்தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையிலேயே கனேடிய மக்களின் நலன் கருதி தற்போது தற்காலிக விதிவிலக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.