மிகவும் ஆபத்தான நிலை... பொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்த வடகொரியா
கடுமையான காலநிலை தொடர இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என வடகொரிய அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
வடகொரியாவின் வடக்கு பிராந்தியங்களில் வெப்பநிலை -30C என சரிவடைந்துள்ளதாகவும், நாட்டின் மிகவும் ஏழ்மையான பகுதி இதுவெனவும் கூறப்படுகிறது. கடலோரப்பகுதிகள் கடுமையான குளிர் காற்றால் பாதிக்கப்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தென் கொரியாவும் கடுமையான குளிர் அலை வீசக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு சீனாவில் வரலாறு காணாத குளிர் வீசுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானிலும் இதே நிலை என்றே கூறுகின்றனர்.
ஆனால் இந்த நாடுகளை விடவும் வடகொரிய மக்கள் கடுமையான காலநிலையை எதிர்கொள்ளும் வசதி ஏதும் இல்லாதவர்கள் என்றே கூறப்படுகிறது. மட்டுமின்றி, தலைநகர் பியோங்யாங்க்கு வெளியே மின்சாரம் என்பது அரிதான ஒன்று எனவும், மக்கள் மரக்கட்டைகளை எரியூட்டியே குளிர்காய்வதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும், கடந்தாண்டு இறுதியில், கடுமையான பனிப்பொழிவு காலகட்டத்தில் வடகொரிய மக்கள் பலர் பட்டினியால் அல்லது போதிய பாதுகாப்பு அம்சங்கள் இன்றி குளிரில் உறைந்து மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
1990 காலகட்டத்தில் இருந்தே வடகொரியாவில் பஞ்சம் தலைதூக்கியுள்ளதாகவும், இதுவரை கிம் அரசாங்கம் அதற்குரிய நடவடிக்கை ஏதும் முன்னெடுக்கவில்லை என்றே கூறப்படுகிறது.