கனடாவின் முகநூல் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடாவில் முகநூல் பயனர்களுக்கு அவசர எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.
முகநூல் வழியாக விற்பனை செய்யப்படும் பொருட்கள் கொள்ளையிடப்படுவதாக மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வான்கூவார் பொலிஸார் இந்த விடயம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
முகநூலில் விளம்பரம் செய்து பொருள் ஒன்றை விற்பனை செய்ய முயற்சித்த நபர் ஒருவரிடமிருந்து துப்பாக்கி முனையில் பொருள் கொள்ளையிடப்பட்டுள்ளது.
வான்கூவாரின் கெரிஸ்டேல் பகுதியில் காபி ஷாப் ஒன்றில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
டிசைனர் கைக்கடிகாரமொன்றை விற்பனை செய்வதற்காக விற்பனையாளரும் கொள்வனவாளரும் சந்தித்த போது இவ்வாறு கைக்கடிகாரம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
முகநூலை சந்தையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் விற்பனைகளின் போது இவ்வாறு கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் ஒன்றுக்கு ஒன்று தொடர்புபட்டதா என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அலைபேசிகள் உள்ளிட்ட பல பொருட்கள் இவ்வாறு கொள்வனவு செய்வதாக உறுதியளித்து விற்பனையாளர்களை சந்தித்து அவர்களிடமிருந்து பொருட்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவங்கள் பதிவாகி வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொருள் ஒன்றை விற்பனை செய்ய செல்லும் போது பாதுகாப்பான இடங்களில் கொள்வனவாளர்களை சந்திக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.