தந்தையின் செயலால் தீயில் எரிந்து கருகிய குடும்பம் ; தாயும் பலியான சோகம்
அநுராதபுரம் - கலென்பிந்துனுவெவ, படிகாரமடுவ பகுதியில் குடும்ப தகராறு காரணமாக தந்தை ஒருவர் தனது வீட்டிற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் தந்தையும் மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (06) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குடும்ப தகராறு
சம்பவத்தில் 43 வயதுடைய தந்தையும் 13 வயதுடைய மகளும் 36 வயதுடைய தாயுமே உயிரிழந்துள்ளனர்.
தீ விபத்தில் சிக்கிய 15 வயதுடைய மகள், 20 வயதுடைய மகன் மற்றும் 66 வயதுடைய பாட்டி ஆகியோர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தந்தை வீட்டிற்கு தீ வைத்தபோது இரண்டு மகள்கள், மனைவி மற்றும் மனைவியின் தாய் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர். சம்பவத்தைக் கேள்விப்பட்டு 20 வயதுடைய மகன் சம்பவ இடத்திற்கு வந்து தனது தாய் மற்றும் சகோதரிகளை மீட்க முயன்றபோது, தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
தீ வைத்த நபர் அடிக்கடி மது அருந்திவிட்டு தனது மனைவியைத் தாக்கி வந்ததாகவும், அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறுகள் காரணமாக, கலென்பிந்துனுவெவ பொலிஸ் நிலையத்தில் பலமுறை முறைப்பாடு அளிக்கப்பட்டு, இரு தரப்பினரும் எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.