கணவன் - மனைவி இடையே குடும்பத்தகராறு: இரு குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்!
தென்காசி மாவட்டம் செக்கடியூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் என்ற சுரேஷ் (வயது 32). இவருக்கும், தென்காசி மங்கம்மாள் சாலை பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் மகள் கவுரி என்ற கனகா (26) என்பவருக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு கீர்த்தனு (5) என்ற ஆண் குழந்தையும், இலக்கியா (2) என்ற பெண் குழந்தையும் உண்டு. கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு காரணமாக பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இதையடுத்து கனகா தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதற்கிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுரேஷ் மீது கனகா ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய பொலிஸார், சுரேசை எச்சரித்து கனகாவுடன் அனுப்பி வைத்தனர். இதையடுத்து கணவன்-மனைவி ஒன்றாக செக்கடியூரில் வாழ்ந்து வந்தனர்.
நேற்று மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபித்துக் கொண்டு சுரேஷ் வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டார்.
இதனால் விரக்தி அடைந்த கனகா தனது குழந்தைகளுடன் வீட்டிற்குள் சென்று, கதவை பூட்டிக் கொண்டார்.
பின்னர் சமையல் அறையில் இருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து வந்து, மனதை கல்லாக்கிக் கொண்டு தன் மீதும், 2 குழந்தைகள் மீதும் மண்எண்ணெயை ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதில் கனகா மற்றும் 2 குழந்தைகளும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.