போரின் காரணமாக வீட்டு வாடகை கூட செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட பிரபல ரஷ்ய தொழிலதிபர்
ஒரு போர் என்னவெல்லாம் செய்யும்? கொத்துக் கொத்தாக மரணங்களை நிகழ்த்தும். மில்லியன் கணக்கில் அகதிகளை உருவாக்கும். செல்வச் செழிப்புடன் திகழ்ந்த கோடீஸ்வரர்களை வறுமையில் தள்ளும். அப்படித்தான் நடந்திருக்கிறது ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான ரோமன் அப்ரோமோவிச்(Roman Abromovich) என்பவருக்கும்.
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24 ஆம் திகதி போர் தொடுப்பதாக அறிவித்தார் ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புதின்(Vladimir Putin). இதனால் கொதித்து எழுந்த மேற்கு உலக நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தன. அதுமட்டும் அல்லாமல் தங்களது நாட்டில் உள்ள ரஷ்ய தொழிலதிபர்களின் சொத்துக்களை முடக்கவும் பல நாடுகள் உத்தரவிட்டுள்ளன.
இதன்படி ஜெர்மனி, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு என உலகின் முன்னணி நாடுகள் பலவும் ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ரஷ்யாவை சேர்ந்தவரான ரோமன் அப்ரோமோவிச் (Roman Abromovich) பெரும் கோடீஸ்வரர் ஆவார்.
இவருக்கு £22 மில்லியன் மதிப்புள்ள வீடு ஒன்று மேற்கு லண்டனில் இருக்கிறது. அதுமட்டும் அல்லாமல் £1.2 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள படகுகள், ஜெட் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் சூப்பர் கார்களை பிரிட்டன் மற்றும் உலகம் முழுவதும் வைத்திருக்கிறார் ரோமன்.
இங்கிலாந்தில் உள்ள பிரபல செல்சி அணியும் இவருக்கு சொந்தமானதே. ரோமனுக்கு லண்டனின் கெனிங்ஸ்டன் பேலஸ் கார்டன் பகுதியில் பிரம்மாண்ட மேன்ஷன் ஒன்று உள்ளது. இதன் அருகிலேயே இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர்.
1848 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பிரம்மாண்ட மேன்சனின் உரிமையாளர் இங்கிலாந்து ராணி ஆவார். ராணியிடமிருந்து 125 ஆண்டுகளுக்கு இந்த கட்டிடத்தை லீஸுக்கு எடுத்திருக்கிறார் ரோமன். இதற்காக ஆண்டுதோறும் £10,000 ஐ கட்டணமாக அவர் செலுத்த வேண்டும்.
ரஷ்யா மீது இங்கிலாந்து விதித்திருக்கும் பொருளாதார தடை காரணமாக ரோமனின் அனைத்து சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன. இதனால் அவருடைய வருமானம் முற்றிலுமாக நின்றுபோயிருக்கிறது.
இதனிடையே மேன்சனின் வாடகை கட்டணத்தை ரோமன் செலுத்தாத பட்சத்தில் அவர்மேது இங்கிலாந்து நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிகிறது. சொத்துக்கள் முடக்கப்பட்டதால், பிற சொத்துக்களை விற்கவும் ரோமனுக்கு வாய்ப்பில்லை என்கிறார்கள் அதிகாரிகள்.
லண்டன் பங்குச் சந்தையில் உள்ள ரோமனுக்கு சொந்தமான பங்குகளும் முடக்கப்பட்டு இருப்பதால் கோடீஸ்வரரான ரோமன் அப்ரோமோவிச் (Roman Abromovich) தான் தங்கி இருக்கும் வீட்டிற்கான வாடகையை கூட செலுத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
