கனடாவில் புகழ்பெற்ற ஈழத் தமிழ் பாடகர் கொரோனாவுக்கு பலி!
புகழ்பெற்ற ஈழத் தமிழ் பாடகரான இசைக் கலை மாமணி வர்ண ராமேஸ்வரன் கனடாவில் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். தமிழீழம் தொடர்பில் பல விடுதலைப்பாடல்களை பாடிய விடுதலைக் கலைஞர், இசைக் கலை மாமணி வர்ண ராமேஸ்வரன் கனடாவில் உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றுக்காக வருகை தந்து மீண்டும் கனடா திரும்பிய நிலையிலேயே அவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
பல்வேறு வித்துவான்களையும், கலைஞர்களையும் தந்த யாழ்ப்பாணத்தின் வடபால் அமைந்துள்ள அளவெட்டி எனும் கிராமத்திற்கு அருகே உள்ள சிறுவிளான் எனும் சிற்றூரில் பிறந்த இவர், பின் யாழ்ப்பாணம், வன்னி, கொழும்பு என வாழ்ந்து கால ஓட்ட மாற்றத்தில் புலம்பெயர்ந்து அவர் இறக்கும் வரை கனடாவில் வசித்து வந்தார்.
பல்துறைக் கலைஞரான வர்ண ராமேஸ்வரன் , யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இசை விரிவுரையாளராக இருந்திருக்கிறார். தென் இந்தியாவில் சென்னையிலும் இசை பயின்றுள்ளதுடன், வர்ணம் எனும் இசைப் பள்ளியினையும் அவர் கனடாவில் நடாத்தி வந்துள்ளார்.
இஎந்நிலையில் எழுச்சிப் பாடல்கள் பலவற்றை பாடி மக்கள் இடத்தில் நீங்கா இடத்தைப் பிடித்த அவரின் மறைவு இலங்கை தமிழ் மக்கள் மத்தியில் அல்லாமல் புலம் பெயர் தமிழர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.