கனடா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி
கனடாவின் டொரோண்டோவின் பியர்சன் விமான நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
சுமார் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பொலிஸார் தொடர்புபட்டிருப்பதாக விமான நிலைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தினால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது எனவும் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து விமான நிலையத்தினை அண்டிய சில வீதிகள் மூடப்பட்டன.
இரண்டு அல்லது மூன்று பேருக்கு இடையிலான மோதல் சம்பவமொன்று தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றதாகவும் அதன் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் பீல் பிராந்திய தலைமை பொலிஸ் அதிகாரி நிசான் துரையப்பா தெரிவித்துள்ளார்.
மோதலை தடுக்க பொலிஸார் முயற்சித்த போது ஒருவர் துப்பாக்கியை பயன்படுத்த முயற்சித்தார் எனவும் இதன் போது பொலிஸார் குறித்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் துரையப்பா தெரிவித்துள்ளார்.