தம்பதியை தாக்கிய சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்!
கடபா அருகே தம்பதியை தாக்கிய சிறுத்தையை வனத்துறையினர் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். கடபா அருகே தம்பதியை தாக்கிய சிறுத்தையை வனத்துறையினர் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். தட்சிண கன்னடா மாவட்டம் கடபா தாலுகா ரெஞ்சிலாடி அருகே ஹேரா கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால் ஹேரா மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்திற்குள் சிறுத்தை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் இரைதேடி புகுந்து ஆடு, மாடு, கோழிகளை அடித்து கொன்று தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதுபற்றி கிராம மக்கள் வனத்துறை அதிகாரிகளிடம் வனவிலங்குகள் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி கூறியும், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தம்பதியை தாக்கியது தட்சிண கன்னடா மாவட்டம் கடபா தாலுகா ஹேரா கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் காமத். அவரது மனைவி சவுமியா காமத். விவசாயிகளான இவர்கள் 2 பேரும், நேற்றுமுன்தினம் காலை தங்களுக்கு சொந்தமான பாக்கு தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் இருந்து இரைதேடி சிறுத்தை ஒன்று பாக்குதோட்டத்திற்குள் நுழைந்து பதுங்கி கிடந்துள்ளது. பின்னர் சிறுத்தை, பாக்குதோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த தம்பதியை கடித்து தாக்கியது. இதனால் 2 பேரும் கூச்சலிட்டனர். இந்த சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடிவந்தனர். ஆனால் அதற்குள் சிறுத்தை, அங்கிருந்து தப்பித்து வனப்பகுதிக்குள் ஓட்டம் பிடித்தது. இரும்பு கூண்டு வைத்தனர். இதில் சேகர் காமத்தும், சவுமியாவும் படுகாயம் அடைந்து தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றி கிராம மக்கள், வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்தனர். பின்னர் வனத்துறையினர், சிறுத்தையின் கால்தடத்தை பார்வையிட்டனர். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள், ஹேரா கிராமத்தில் பாக்கு தோட்டம் உள்பட வனப்பகுதியொட்டிய பகுதிகளில் ஆங்காங்கே இரும்பு கூண்டு வைத்தனர்.
சிக்கியது
இந்தநிலையில் நேற்று காலையில் பாக்குதோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் அந்த சிறுத்தை பதுங்கி இருந்ததை வனத்துறையினர் பார்த்தனர். இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு கால்நடை டாக்டரை வரவழைத்தனர்.
அதன்பேரில் அவரும் வந்தார். பின்னர் கால்நடை டாக்டர், துப்பாக்கி மூலம் அந்த சிறுத்தை மீது மயக்க ஊசியை செலுத்தினார்.
மயக்க ஊசி உடலில் பாய்ந்ததும் சிறுத்தை ஆக்ரோஷமாக மரத்தில் இருந்து குதிக்க முயன்றது.
அப்போது அது கிளையில் சிக்கிக் கொண்டது. பின்னர் அப்படியே சிறுத்தை மயங்கியது. அதையடுத்து வனத்துறையினர் வலையை விரித்து அந்த சிறுத்தையை பிடித்தனர்.
அதைதொடர்ந்து பிடிபட்ட சிறுத்தை, பிலிகுலா வனஉயிரியில் பூங்காவில் விடப்பட்டது. பிடிபட்டது 4 வயது பெண் சிறுத்தை ஆகும். தங்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டதால், கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.