எங்களுக்கும் அதே நிலை வரலாம்... நால்வர் மரணம் குறித்து இஸ்லாமிய பெண் உருக்கம்
வெறுப்புணர்வால் லண்டனில் இஸ்லாமிய குடும்பம் கனேடிய இளைஞரால் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில், ஹிஜாப் அணிவதால் தங்களுக்கும் அதே நிலை வரலாம் என இஸ்லாமிய பெண் ஒருவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
லண்டனில் கடந்த ஞாயிறு இஸ்லாமிய குடும்பம் ஒன்று கனேடிய இளைஞர் ஒருவரால் வாகனம் மோதவிட்டு கொல்லப்பட்டனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த சம்பவத்தில் கைதான 20 வயது இளைஞர் மீது பயங்கரவாத செயலுக்கான வழக்கு பதிவு செய்வது தொடர்பில் ஆலோசித்து வருவதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இது திட்டமிட்ட செயல் என பொலிஸ் தரப்பு உறுதி செய்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் இஸ்லாமியர்கள் என்பதாலையே கொலை நடந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நிலையில், சர்ரே பகுதியை சேர்ந்த இரு இளம் பிள்ளைகளின் தாயாரான பாத்திமா அஜீஸ் உருக்கமாக பேசியுள்ளார். மத நம்பிக்கையின் பொருட்டு ஹிஜாப் அணிந்து கொள்வதால், தமது உயிருக்கு மட்டுமல்ல, இதனால் தமது பிள்ளைகளின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
கனடாவில் பிறந்து வளர்ந்த அஜீஸ் இதுவரையான வாழ்க்கையில் தமது விசுவாசத்தின் காரணமாக இனவெறி மற்றும் பாதிப்புகளையும் அனுபவிக்க நேர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
கனேடிய அரசியல்வாதிகள், இதுபோன்ற சம்பவங்களில் வெறும் இரங்கல் தெரிவிப்பதுடன் நின்றுவிடாமல், உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.