கனடாவில் அதிகரித்துச் செல்லும் குடிவரவு வழக்குகள்: தலைமை நீதிபதி எச்சரிக்
கை கனடா நீதிமன்றத்தில் குடிவரவு தொடர்பான வழக்குகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதால், நீதிமன்றத்தின் பணிச்சுமை கட்டுக்கடங்காத நிலையை எட்டியுள்ளதாக தலைமை நீதிபதி ஆலன் டினர் தெரிவித்துள்ளார்.
2014 ஆம் ஆண்டில் ஆண்டிற்கு 5,000 முதல் 6,000 வரை மட்டுமே பதிவான குடிவரவு வழக்குகள், 2021 இல் 9,700 ஆக உயர்ந்தன.
நடப்பாண்டில் இந்த எண்ணிக்கை 33,000 ஐத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 14,000 க்கும் அதிகமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், 28,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

நீதிமன்றத்தில் உள்ள 44 நீதிபதிகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், 2020 ஆம் ஆண்டிற்குப் பின்னர் வழக்குகள் 600% வரை அதிகரித்துள்ளன.
இதனால் நீதிபதிகளும் நீதிமன்ற ஊழியர்களும் இரவு பகலாகவும், வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களிலும் தொடர்ந்து பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
மார்ச் மாதம் கொண்டுவரப்பட்ட கனடாவின் C-12 எல்லை பாதுகாப்புச் சட்டம் நிலைமையை மேலும் தீவிரமாக்கியுள்ளது.
கனடாவிற்கு வந்து ஒரு வருடத்திற்குப் பின்னர் அகதி உரிமை கோருபவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், இச்சட்டத்தின் அரசியலமைப்புச் செல்லுபடியாகும் தன்மையை எதிர்த்து 2,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
வழக்கமாக ஆண்டிற்கு 300 முதல் 400 வரை மட்டுமே பதிவாகும் நாடுகடத்தலை நிறுத்துவதற்கான கோரிக்கைகள், தற்போது 1,100 ஐத் தாண்டியுள்ளன.
ஆவணங்களைச் செயலாக்குவதற்கான வழக்கமான 48 மணிநேர இலக்கு மாறி, தற்போது 8 வாரங்கள் வரை தாமதம் ஏற்படுகிறது.
நீதிமன்றப் பணிகளைச் சீரமைக்க கூடுதல் நீதிபதிகளை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும் நீதிமன்றம் பரிசீலித்து வருகிறது.