அமெரிக்காவில் தாகூர் நுாற்றாண்டு இசை விழா
தேசியக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், 1921, பிப்., இல், அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்கு வருகை தந்து, ரைஸ் பல்கலையில் சிறப்புரை ஆற்றினார். இதன் நினைவாக, ஹூஸ்டன் தாகூர் கழகம், நுாற்றாண்டு விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. தாகூரின் வெண்கலச் சிலை அமைந்துள்ள, ரே மில்லர் பூங்காவில் நடந்த இந்த நிகழ்ச்சியில், ஹூஸ்டன் துணை துாதர் அசீம் மகாஜன் பேசியதாவது:தாகூரின் அமெரிக்க சுற்றுப் பயணத்தில், ஹூஸ்டன் நகரம் இரண்டாவதாக அமைந்திருந்தது. எல்லையற்ற உலகம், அமைதி, அன்பு ஆகியவற்றை, தாகூர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
அவரது கவிதைகள், சொற்பொழிவுகள், கட்டுரைகள் ஆகியவை சர்வதேச மக்களின் ஒற்றுமையை பறைசாற்றுவதாக இருந்தன.
அதிலும், ஹூஸ்டன் போன்ற பன்முக கலாசாரத்தைச் சேர்ந்த மக்கள் வசிக்கும் நகரில், தாகூர் ஆற்றிய சொற்பொழிவு, இன்றளவும் மறக்க முடியாத, அனைவராலும் ஏற்கக் கூடியதாக உள்ளது சிறப்பு.
இவ்வாறு, அவர் பேசினார். அடுத்த நாள், 'வீடியோ கான்பரன்சிங்' வாயிலாக நடந்த இசை நிகழ்ச்சியில், தாகூரின் கவிதைகளை ஷ்ரேயா குஹயதாகுர்தா பாடி, கூட்டத்தினரை மகிழ்வித்தார்.