திடீரென்று வணிக வளாகம் ஒன்றில் குவிக்கப்பட்ட பொலிஸ்: கேட்ட துப்பாக்கிச் சத்தம்
கனடாவின் Etobicoke பகுதியில் அமைந்துள்ள Sherway Gardens வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதை அடுத்து ஊழியர்கள், பொதுமக்கள் என அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை மதியத்திற்கு மேல் சுமார் 2.40 மணியளவில், பொலிசாருக்கும் அவசர மருத்துவ உதவிக்குழுவினருக்கும் துப்பாக்கிச் சூடு தொடர்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில் அந்த வணிக வளாகத்தினுள் அமைந்துள்ள Starbucks அருகே கைகலப்பு நடந்ததற்கான வாய்ப்புகள் காணப்பட்டதாகவும், அதில் ஒருவர் துப்பாக்கி உருவி, சுட்டுள்ளார் எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும் துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் ரத்தக்கறை இருந்துள்ளதை பொலிசார் உறுதி செய்துள்ளனர். ஆனால் அது துப்பாக்கியால் சுட்டதால் ஏற்பட்டதா என்பது தொடர்பில் உறுதி செய்ய வேண்டும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, துப்பாக்கிச் சூடில் ஈடுபட்டவர்களை மிக விரைவில் கைது செய்ய உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே, குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பொதுமக்கள் அந்த வணிக வளாகத்தில் சிக்கிக்கொள்ள, ரொறன்ரோ சிறப்பு பொலிசார், பீல் பொலிஸ் சிறப்பு படையினர் ஒன்றிணைந்து குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சுமார் 5 மணியளவில் வணிக வளாகத்தை மொத்தமாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பொலிசார், அதன் பின்னர் சிக்கியிருந்த பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றினர்.
இதனிடையே, சந்தேக நபர்களைப் பற்றி காவல்துறைக்கு சில சாத்தியமான தகவல்கள் கிடைத்துள்ளன எனவும், விரைவில் அடையாளங்களை வெளியிட முடியும் என்று நம்புவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.