அவுஸ்திரேலியாவை தொடர்ந்து மலேசியாவிலும் சிறார்களுக்கு தடை!
அவுஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளில் சமூக ஊடக பயன்பாட்டிற்கான வயதுக் கட்டுப்பாடுகளை விதிக்கப் பயன்படுத்தப்படும் வழிமுறைகளை மலேசிய அரசாங்கம் மறுபரிசீலனை செய்து வருவதாக மலேசிய தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் நேற்று (23) தெரிவித்துள்ளார்.
அதன்படி மலேசியாவில் அடுத்த ஆண்டு முதல் 16 வயதுக்குட்பட்ட பயனர்கள் சமூக ஊடகங்களை பாவிப்பதற்கு தடை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களை பாவிப்பதற்கு தடை
இதேவேளை சைபர்புல்லிங், நிதி மோசடிகள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற ஒன்லைன் பாதிப்புகளிலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
16 வயதுக்குட்பட்டவர்கள் பயனர் கணக்குகளைத் திறப்பதைத் தடைசெய்யும் அரசாங்கத்தின் முடிவை சமூக ஊடக தளங்கள் அடுத்த ஆண்டுக்குள் பின்பற்றும் என்று நாங்கள் நம்புகிறோம், என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒன்லைன் சூதாட்டம் மற்றும் இனம், மதம் மற்றும் அரச குடும்பத்துடன் தொடர்புடைய பதிவுகள் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தின் அதிகரிப்புகளால் மலேசியா சமீபத்திய ஆண்டுகளில் சமூக ஊடக நிறுவனங்களை அதிக ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது.
மலேசியாவில் 8 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட தளங்கள் மற்றும் செய்தி சேவைகள் ஜனவரியில் நடைமுறைக்கு வரும் புதிய ஒழுங்குமுறையின் கீழ் உரிமத்தைப் பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.