கால்பந்து வெற்றிக் கொண்டாட்டத்தில் கலவரம் ; நூற்றுக் கணக்கானோர் காயம்
பிரான்சில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி வெற்றி கொண்டாட்டங்களில் வன்முறை வெடித்ததில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
சாம்பியன்ஸ் லீக் போட்டியில் PSG கால்பந்து கிளப் அணி, இன்டர் மிலனை தோற்கடித்தது. ஆயிரக்கணக்கான PSG ரசிகர்கள், தலைநகர் பாரிஸின் தெருக்களில் இறங்கி பெரிய அளவிலான கொண்டாட்டங்களைத் தொடங்கினர்.
559 பேர் கைது
இந்நிலையில் கூட்டத்தில் எதிர் அணிகளின் ரசிகர்களுக்கும் PSG ரசிகர்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் வெடித்தன. இது கடுமையான மோதல்களுக்கு வழிவகுத்தது.
இந்த வன்முறை சம்பவங்களில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும், 192 பேர் காயமடைந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பாரிஸின் தெருக்களில் நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் சென்றதால், பாதுகாப்புப் படையினர் உடனடியாகத் தலையிட்டனர்.
வன்முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்களைக் கலைக்க கண்ணீர் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர். போராட்டக்காரர்கள் பல வாகனங்களுக்கு தீ வைத்ததாகவும், பேருந்து நிறுத்துமிடங்களை அழித்ததாகவும் அங்குள்ள வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கடைகளுக்குள் நுழைந்து, பொருட்களைக் கொள்ளையடித்ததாகவும், அவர்களைத் தடுக்க முயன்ற பாதுகாப்புப் பணியாளர்களைத் தாக்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மோதல்கள் தொடர்பாக இதுவரை மொத்தம் 559 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும், மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.