கனடாவில் அறுவை சிகிச்சைக்காக 2,000 கி.மீ பயணித்த தந்தை-மகன்: பின்னர் நடந்த பரிதாப சம்பவம்
கனடாவின் வடமேற்கு பிரதேசத்தை சேர்ந்த தந்தை ஒருவர் தமது மகனின் அறுவை சிகிச்சைக்காக 2,000 கி.மீ தொலைவு பயணித்துள்ளதன் பின்னணி வெளியாகியுள்ளது.
வடமேற்கு பிரதேசத்தின் Tuktoyaktuk பகுதியை சேர்ந்த Tyrone Raddi என்பவரே தமது 17 வயது மகனின் அறுவை சிகிச்சைக்காக 2,000 கி.மீ தொலைவு கடந்து எட்மண்டன் சென்றுள்ளார்.
ஆனால் ஆல்பர்ட்டா முழுமையும் கொரோனா பரவல் காரணமாக அறுவை சிகிச்சைகள் தற்போது முன்னெடுக்க முடியாது என மருத்துவமனை நிர்வாகத்தினரால் மறுக்கப்பட்டுள்ளது.
திங்களன்று முன்னெடுக்க வேண்டிய அறுவை சிகிச்சைக்காக ஞாயிறன்றே எட்மண்டன் சென்று சேர்ந்ததாகவும், ஆனால் இறுதி நேரத்தில் அனைத்தும் தலைகீழானது என்கிறார் Tyrone Raddi.
ஒரு சிறு சமூகத்தில் இருந்து பல நூறு கி.மீ தொலைவு பயணித்து கொரோனா உச்சம் கண்டுள்ள ஒரு பகுதிக்கு சென்றுள்ளது உண்மையில் கலக்கத்தை ஏற்படுத்துவதாக Tyrone Raddi குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய சூழலில் மட்டும் அறுவை சிகிச்சை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டிருந்தாலும், அது விரைவில் சாத்தியமாகுமா என்பது உறுதியில்லை என்கிறார் அவர்.
ஆல்பர்ட்டாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. வியாழக்கிழமை வெளியான தகவலின் அடிப்படையில் 310 நோயாளிகளில் 226 பேர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பெரும்பாலான மருத்துவமனைகள் அறுவை சிகிச்சைகளை தள்ளி வைத்து வருகின்றன.
வடமேற்கு பிரதேசத்தில் குடியிருக்கும் மக்கள் பெரும்பாலும் எட்மண்டன் பகுதியிலேயே மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.