ஒன்ராறியோவில் பள்ளிகள் திறப்பது எப்போது? ஃபோர்டு அரசாங்கம் முக்கிய தகவல்
எதிர்வரும் நவம்பர் மாதம் வரையில் ஒன்ராறியோவில் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என முதல்வர் டக் ஃபோர்டு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் அமைச்சரவை இறுதி முடிவெடுக்கும் என்றே தெரிய வந்துள்ளது. ஒன்ராறியோவில் பள்ளிகளை திறந்து செயல்பட அனுமதிக்குமாறு நிபுணர்கள் தரப்பு கோரிக்கை வைத்திருந்த நிலையில்,
பாதிப்பு எண்ணிக்கையில் அதிகரிப்பு குறித்த கவலைகள் காரணமாக குழந்தைகளை வகுப்பறைக்குத் திரும்ப அனுமதிக்க முதல்வர் ஃபோர்டு தயக்கம் காட்டி வந்துள்ளார்.
இருப்பினும், புதன்கிழமை கூட்டப்படும் கூட்டத்தின் போது முதல்வர் முன்வைத்துள்ள இந்த முடிவை அமைச்சரவை இறுதி செய்யும் என்றே நம்பப்படுகிறது.
மேலும் குறித்த முடிவானது மாற்றியமைக்கப்படலாம் என்ற கருத்தும் வெளியாகியுள்ளது. குறைந்தபட்சம் நவம்பர் மாதம் வரையில் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
இது முக்கிய பொது சுகாதார நிபுணர்கள் பலருடன் கலந்தாலோசித்து, அவர்கள் அளித்துள்ள கருத்துகளின் அடிப்படையிலேயே முதல்வர் ஃபோர்டு இந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த வாரத்தில் மட்டும் 6 முதல் 11% பாதிப்பு அதிகரித்துள்ளதாக பதிவாகியுள்ள நிலையில், பள்ளிகள் திறந்து செயல்பட்டால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், டெல்டா என பெயர் மாற்றம் பெற்றுள்ள இந்திய மாறுபாடு தொடர்பிலான அச்சம் இன்னும் விலகாத நிலையில் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
பள்ளிகள் திறந்து செயல்பட்டால் கண்டிப்பாக நோய் பரவல் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக முதன் முறையாக முதல்வர் ஃபோர்டு குறிப்பிட்டிருந்தார்.
குழந்தைகள் பாதுகாப்பே முக்கியம் என்பதையும் அவர் தெளிவாக கடிதம் மூலம் சுட்டிக்காட்டியிருந்தார். கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்தே ஒன்ராறியோவில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.
ஆனால் சமீப நாட்களாக பள்ளிகளை திறந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.