சீனாவின் இரகசியங்களை பிரித்தானியாவிற்கு உளவு பார்த்த நபர் கைது!
சீனாவின் உளவு அமைப்புகளில் ஒன்றாக செயல்பட்டு வரும் எம்.எஸ்.எஸ். என்ற மாகாண பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், ஹுவாங் என்ற பெயர் கொண்ட வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் இங்கிலாந்து நாட்டின் எம்.ஐ.6 அமைப்புக்காக நீண்ட காலம் உளவு பார்த்துள்ளார்.
அவர் வெளிநாட்டு ஆலோசனை நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்துள்ள நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015-ம் ஆண்டு எம்.ஐ.6 அமைப்புக்காக, ஹுவாங், உளவு வேலைகளில் ஈடுபட தொடங்கினார்.
சீனாவில் உளவு வேலை செய்வதற்கும் பல்வேறு சக்தி வாய்ந்த அமைப்புகளை அடையாளம் கண்டு தெரிவிக்கும்படியும், இங்கிலாந்து அமைப்பு அவரை சீனாவுக்கு பல முறை அனுப்பி வைத்துள்ளது.
உளவு பார்ப்பதற்கான பயிற்சி
எம்.ஐ.6 அமைப்பு அவரிடம் இருந்து உளவு தகவல் மற்றும் தகவல் தொடர்புகளை பெற்று கொண்டு அதற்கு பதிலாக, உளவு பார்ப்பதற்கான பயிற்சிகளை அளித்ததுடன், தொழில்முறை உளவு சாதனங்களையும் அளித்துள்ளது என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது.
சீனாவின் பல்வேறு தேசிய ரகசியங்கள் உட்பட 17 உளவு தகவல்களை பிரிட்டனுக்கு ஹுவாங் அளித்திருக்கிறார் என்றும் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.
இதுபற்றி நடத்திய விசாரணையில், சட்டத்திற்கு உட்பட்டு சொந்த நாட்டில் இருந்து கொண்டு, தூதரக உதவியை ஹுவாங் பெறுவதற்கான அனுமதியும் அவருக்கு வழங்கப்பட்டு உள்ளது.
எனினும், ஹுவாங்கின் முழு பெயர், பாலினம் அல்லது எந்த நாட்டை சேர்ந்தவர் அல்லது அவர் பணியாற்றிய நிறுவனத்தின் அடையாளம் உள்ளிட்ட தகவல்களை எம்.எஸ்.எஸ். வெளியிடவில்லை.