பள்ளி சிறார்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட விவகாரம்: விரிவான விசாரணைக்கு கோரிக்கை
கனடாவில் கம்லூப்ஸ் பகுதியில் பூர்வ குடிமக்கள் பள்ளி வளாகம் ஒன்றில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவத்தில் விரிவான விசாரணை கோரப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் Mary Ellen Turpel-Lafond என்பவர் தற்போது இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
கம்லூப்ஸ் பகுதி மட்டுமின்றி, இதுபோன்ற பல பள்ளிகள் செயல்பட்டு வந்ததையும், அங்கெல்லாம் பூர்வ குடிமக்களின் சிறார்கள் மாயமாகியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் அந்த புகார்களுக்கு உரிய கவனம் செலுத்தப்படவில்லை எனவும், விசாரணைக்கான ஆதரவும் அரசாங்கத்தால் தெரிவிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற சவக்குழிகள் கண்டுபிடிக்கப்படும் போது, ஐக்கிய நாடுகள் சபை ஒரு கட்டமைப்பை உருவாக்கி விசாரணையை முன்னெடுத்து வருவதுண்டு. அதுபோன்ற சர்வதேச பங்களிப்பை இந்த விவகாரத்திலும் ஏற்படுத்துவதன் மூலம், நாம் சரியானதை செய்கிறோம் என்பதை உறுதி செய்ய முடியும் என்றார்.
மேலும், பெடரல் அரசாங்கம் உடனடியாக ஒரு சிறப்பு பிரதிநிதியை நியமிக்க வேண்டும் எனவும், இந்த விவகாரத்தில் சர்வதேச தரத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
விசாரணைகள் நடப்பதை உறுதி செய்யும் ஒரு கட்டமைப்பை உருவாக்குவதற்கான சட்டமும் நிதியுதவியும் சரியாக செய்யப்பட வேண்டும்.
மட்டுமின்றி, விசாரணை என்ற போர்வையில் பூர்வ குடிமக்களையும் இந்த சம்பவத்தில் உயிர் தப்பியவர்களையும் எந்த வகையிலும் கட்டாயப்படுத்த கூடாது எனவும் Mary Ellen Turpel-Lafond தெரிவித்துள்ளார்.