பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு ஓராண்டு சிறை!
பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோஸிக்கு (Nicolas Sarkozy) முறைகேடாக தேர்தல் நிதி பெற்ற வழக்கில் , ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் 66 வயதான நிக்கோலஸ் சர்கோஸி (Nicolas Sarkozy) இந்த குற்றச்சாட்டை மறுத்த நிலையில் அவர் மேல்முறையீடு செய்வார் என அவரது வழக்கறிஞர் உறுதி செய்துள்ளார்.
கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை பிரான்ஸ் ஜனாதிபதியாகப் பொறுப்பு வகித்த சர்கோஸி (Nicolas Sarkozy), 2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட்டபோது, அனுமதியளிக்கப்பட்ட 22.5 மில்லியன் யூரோக்களை விட அதிகமாக இரு மடங்கு தேர்தல் நிதி திரட்டியதாக அவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது.
இதுதொடர்பாக நடைபெற்று வந்த வழக்கில் அந்தக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்திய பரிஸ் நீதிமன்றம், நிக்கோலஸ் சர்கோஸிக்கு (Nicolas Sarkozy) ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தது.
அந்த ஓராண்டில், மின்னணு கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட்ட கைவளையத்துடன் அவரை வீட்டுக் காவலில் வைத்திருக்கவும் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
இதேவேளை 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற மறுதேர்தலில், நிக்கோலஸ் சர்கோஸி (Nicolas Sarkozy) , சோசலிஸ்ட் பிராங்கோயிஸ் ஹாலண்டேவிடம் தோற்றார்.