கனடாவில் தொடர்ந்து கண்டுபிடிக்கப்படும் குழந்தைகளின் கல்லறைகள்... மக்கள் கோபத்தின் விளைவு
கனடாவில் தொடர்ந்து பூர்வக்குடியின குழந்தைகளின் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுக்கொண்டே வரும் சம்பவம், மக்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
புலம்பெயர்ந்தோரை கைநீட்டி வரவேற்கும் நாடு என ஒருபக்கம் நற்பெயர் பெற்றுள்ள கனடா, மறுபக்கம் பூர்வக்குடியின குழந்தைகள் ஏராளமானோரின் சாவுக்கு காரணமான நாடு என்ற அவப்பெயரை சமீப நாட்களாக பெற்றுவருகிறது.
முதலில், பிரிட்டிஷ் கொலம்பியாவின் Kamloops என்ற இடத்திலுள்ள பூர்வக்குடியின குழந்தைகளுக்கான பள்ளி அமைந்துள்ள இடத்தில் 215 பிள்ளைகளின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ள சம்பவம் கனடாவை உலுக்கியது. அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், Saskatchewanஇலுள்ள Marieval என்ற இடத்திலுள்ள மற்றொரு பள்ளியில் 751 குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கபட்டன.
இந்நிலையில், தற்போது மூன்றாவதாக பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Cranbrook என்ற இடத்தில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் 182 பிள்ளைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட, கொதித்தெழுந்துள்ளார்கள் மக்கள். சம்பந்தப்பட்ட பள்ளிகள் கத்தோலிக்க திருச்சபைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகள் என்பதால், மக்களுடைய கோபம் கத்தோலிக்கத் திருச்சபைகள் பக்கம் திரும்பியுள்ளது.
ஆகவே, அவர்கள் தேவாலயங்களை தீவைத்துக் கொளுத்தத் துவங்கியுள்ளார்கள். இதுவரை கனடா முழுவதிலும் 8 தேவாலயங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன. பல தேவாலயங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன, சிலவற்றின் மீது சிவப்பு பெயிண்ட் ஊற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடந்த விடயங்கள் வேதனையை அளிப்பதாக இருந்தாலும், தேவாலயங்களை சேதப்படுத்துவதும், தீவைத்துக் கொளுத்தப்படுவதும் கண்டனத்துக்குரியது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
ஆராதனை செய்யும் இடங்களை அழிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று கூறியுள்ள அவர், அது நிறுத்தப்படவேண்டும் என்றும், நாம் ஒருங்கிணைந்து கடந்த கால தவறுகளை சரி செய்யவேண்டும் என்றும் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.