உக்ரைன் பிரதேசங்கள் ரஷ்யாவுடன் இணைப்பு: வெளியான இறுதி முடிவு
உக்ரைனில் பிரிவினைவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள நான்கு பிராந்தியங்களை இன்று முறைப்படி தன் நாட்டுடன் இணைக்க உள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24ல் ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்தது. சிறப்பு இராணுவ நடவடிக்கை என கூறி வரும் ரஷ்யா ஏழு மாதங்களாக போரிட்டு வருகிறது. ரஷ்யப் படைகளுக்கு எதிராக, உக்ரைன் ராணுவம் கடும் எதிர் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், போரை தீவிரப்படுத்தும் வகையில் உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கே உள்ள நான்கு பிராந்தியங்களான டோனெட்ஸ்க், லுஹான்க்ஸ், கெர்சான் மற்றும் ஜபோரிஸ்சியாவை தன்னுடன் இணைக்க ரஷ்யா திட்டமிட்டது.
இதற்காக, இந்தப் பிராந்தியங்களில் மக்களின் கருத்துகளை கேட்கும் வாக்கெடுப்பு சமீபத்தில் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, குறித்தப் பிராந்தியங்கள் இன்று ரஷ்யாவுடன் இணைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் டிமித்ரி கெஸ்கோவ் நேற்று மாஸ்கோவில் தெரிவிக்கையில், மக்களிடையே நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் இந்தப் பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைக்க மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
ஜபோரிஸ்சியாவில் 93 சதவீதம் பேரும், கெர்சானில் 87 சதவீதம் பேரும், லுஹான்க்சில் 98 சதவீதம் பேரும், டோனெட்ஸ்க்கில் 99 சதவீதம் பேரும் ரஷ்யாவுடன் இணைக்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதையடுத்து, மாஸ்கோவில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில் இந்தப் பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்படுவதை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவிக்க இருக்கிறார். அப்போது, இந்தப் பிராந்தியங்களின் நிர்வாகத்தினர் முறைப்படி ஒப்பந்தம் செய்ய உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த வாக்கெடுப்பை புறக்கணிப்பதாகவும், ரஷ்யாவின் இணைப்பு முயற்சியை அங்கீகரிக்கப் போவதில்லை என்றும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கூறியுள்ளன.