பிரான்ஸில் தமிழர் பகுதியில் மர்ம கும்பலின் அட்டகாசத்தை ஒழித்த பொலிஸார்!
பிரான்ஸில் தமிழர்கள் அதிகம் வாழும் பாரிஸ் பிராந்தியம் உட்பட இல்-து-பிரான்சில் தொடர் கொள்ளைகளில் ஈடுபட்ட மூவர் கொண்ட குழுவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அதன்படி 44, 46 மற்றும் 55 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் பாரிஸ், Hauts-de-Seine, Val-de-Marne, Essonne, Seine-et-Marne, Yvelines மற்றும் Val-dOise ஆகிய மாவட்டங்களில் உள்ள வீடுகள் பலவற்றை உடைத்து அங்கிருந்த பல பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுள்ளனர்.
இதுவரை 9 இடங்களில் கொள்ளைகளில் ஈடுபட்டதாகவும், கொள்ளையிடப்பட்ட மொத்த பொருட்களின் மதிப்பு 800,000 யூரோக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் கியூபா நாட்டவராகும். இரண்டு பேர் பெரு நாட்டவர்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
இவர்கள் நவம்பர் மாதத்தின் ஆரம்பம் முதலே கும்பலாக இயங்கியுள்ளனர். குறித்த மூவரும் மிகச் சாதாரணமாக வீதிகளில் நடந்து சென்று, ஆட்கள் இல்லாத வீடுகளாக பார்த்து அவதானித்து வீட்டுக்குள் இறங்கி கொள்ளைகளில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரிஸ் பிராந்தியத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கிய இந்த மூவரும் நகைகள் மற்றும் டிஜிட்டல் பொருட்களைத் தேடுவதற்காக முழு இல்-டி-பிரான்ஸின் புறநகர்ப் பகுதிகளிலும் சுற்றி திரிந்துள்ளனர்.
இந்நிலையில் சந்தேக நபர்களின் வாகனத்தை சோதனையிட்ட போது, வீடு மற்றும் ஹோட்டலில் இருந்து திருடப்பட்ட நகைகள், தொலைக்காட்சி மற்றும் கணினி ஆகியவைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவர், 2015ஆம் ஆண்டு முதல் பிரான்ஸில், ஏற்கனவே திருட்டுக்காக பலமுறை தண்டனை பெற்றவர். மற்ற இருவரும் சுற்றுலா விசாவில் சில வாரங்களுக்கு முன்பு பிரான்ஸ் வந்துள்ளனர்.
எதிர்வரும் டிசம்பர் 12 ஆம் திகதி அவர்கள் மூவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர். குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெறும் அவர்களின் விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் அவர்கள் அதுவரையில் சிறையில் அடைக்கப்பட்டனர்.