இலவச வாய்ப்பு.. நாசா அதிரடி அறிவிப்பு!
ஆர்டெமிஸ் என்ற பெயரில் சர்வதேச மனித விண்வெளிப் பயணத் திட்டத்தை அமெரிக்காவின் நாசா துவங்கியுள்ளது. 2025-க்குள் மனிதர்களை நிலவுக்கு, குறிப்பாக நிலவின் தென் துருவத்திற்கு அனுப்புவது இதன் நோக்கம் ஆகும்.
அதற்கு முன்பாக, பரிசோதனை முயற்சியாக ஆர்டெமிஸ்-1 திட்டத்தை இந்த ஆண்டு நாசா செயல்படுத்த உள்ளது. எனினும் இந்தத்திட்டத்தில் மனிதர்களை அனுப்ப போவதில்லை என நாசாகூறியுள்ளது.
மனிதர்கள் செல்லக்கூடிய ஓரியன் விண்கலத்தை எஸ்.எல்.எஸ். எனும் உலகின் சக்திவாய்ந்த ராக்கெட் மூலம் புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து மே அல்லது ஜூன் மாதம் ஏவ உள்ளனர்.
இந்த விண்கலம் சுமார் 6 வாரங்களில் 4.5 லட்சம் கிலோமீட்டர் பயணித்து நிலவை கடந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் சென்று திரும்பும்.
மனிதர்களுக்காக உருவாக்கப்பட்ட விண்கலம் இதுவரை செல்லாத அளவிற்கு ஆழ்ந்த விண்வெளிக்கு செல்லும். அப்போது விண்கலம் உள்ளிட்ட அமைப்புகள் சரியாக இயங்குகிறதா என பரிசோதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் பின்னர் நிலவை சுற்றி வரும் ஓரியன் விண்கலம் பூமியை நோக்கி பயணித்து கலிபோர்னியா கடலில் ஸ்பிளாஷ்டவுன் முறையில் பாதுகாப்பாக தரையிறங்கும். இந்த பயணத்திட்டத்தில் மற்ற பயன்பாடுகளுக்கான கியூப் சாட் செயற்கைக்கோள்களும் வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படும்.
இந்நிலையில், பொதுமக்களின் பெயர்களை சேகரித்து நாசா ஓரியன் விண்கலத்துடன் நிலவை சுற்றி வர வைக்க உள்ளது. அதற்கான பதிவு கடந்த 11 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
https://www.nasa.gov/send-your-name-with-artemis/ என்ற நாசாவின் தளத்திற்கு சென்று பெயர், தந்தை பெயர், தபால் பெட்டி எண் அளித்தால் விமான டிக்கெட் போல போர்டிங் பாஸ் க்யூஆர் கோடுடன் தயாராகிறது.
அதன் பின் விண்கலத்துடன் நமது பெயரும் பூமியையும், நிலவையும் சுற்றி வரும். அதை நினைக்கும்போது, விண்வெளிக்கு செல்லவே டிக்கெட் கிடைத்தது போன்ற பரவசம் ஏற்படும்.
இந்நிலையில் இலவச பதிவான இவற்றில் 10 லட்சம் பேர் தங்கள் பெயர்களை இணைத்துள்ளனர்.