சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக 3 பில்லியன் டொலர்களை கடனாக கோரும் இலங்கை
இலங்கை, கடன் வழங்குநர்களின் நீடிக்கப்பட் நிதி வசதிகளின் மூலம் மூன்று பில்லியன் டொலர்களை கடனாக பெற்றுக்கொள்வது குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் இலங்கை அரசாங்கம் இந்த மாத ஆரம்பத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் மற்றுமொரு சுற்று தொழிற்நுட்ப பேச்சுவார்த்தைகளை நடத்த எதிர்பார்த்துள்ளது.
மேலும் இந்த மாத இறுதிக்குள் விரைவாக அதிகாரிகள் மட்டத்திலான உடன்படிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனினும் இந்த தகவல் தொடர்பாக சர்வதேச நாணய நிதியமோ, இலங்கையின் நிதியமைச்சோ, இலங்கை மத்திய வங்கியோ கருத்துக்களை வெளியிடவில்லை.
சுதந்திரத்திற்கு பின் ஏற்பட்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடி
இலங்கை 1948 ஆம் ஆண்டு சுதந்திரத்திற்கு பின்னர் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருவதுடன் அதில் இருந்து மீள்வதற்கான திட்டங்களை கோரியுள்ளது.
இலங்கை இந்த ஆண்டின் ஆரம்பத்தில் பெற்ற கடன்களை திரும்ப செலுத்தவில்லை. அத்துடன் எரிபொருள், மருந்து உட்பட அத்தியவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான டொலர்களை பெற்றுக்கொள்வதிலும் சிரமங்களை எதிர்நோக்கி வருகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்களுக்கு அமைய இலங்கை பொருளாதார ரீதியாக பேரூன்றியுள்ள பலவீனங்களை சீர் செய்ய வேண்டும். நாட்டின் பொருளாதார கட்டமைப்பில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டமானது நான்கரை ஆண்டுகள் சலுகை காலத்தை கொண்ட மூன்று ஆண்டு திட்டமாகும். எனினும் சர்வதேச நாணய நிதியம் இந்த திட்டத்தை வழங்குவது தொடர்பாக இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
இடைக்கால வரவு செலவுத் திட்டம்
அதேவேளை விரிவான மறுசீரமைப்பு பொதி தொடர்பில் இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சர்வதேச நாணய நிதியம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது. எனினும் எந்த விதத்திலான பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது என்பதை நிதியம் வெளியிடவில்லை.
மக்களின் எதிர்ப்பு காரணமாக கடந்த மே மாதம் மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க, அடுத்த சில வாரங்களில் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளார்.
இதனிடையே வருமானத்தை அதிகரிப்பதற்காக உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அரசாங்கம் செவ்வாய் கிழமை வரி திருத்தங்களை அறிவித்துள்ளது.
நிறுவன வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் பெறுமதி கூட்டல் வரியை 8 வீதத்தில் இருந்து 12 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனை தவிர சீன, ஜப்பான் உட்பட பிணை முறி பத்திரங்களை கொண்டுள்ளவர்கள் மற்றும் இருத்தரப்பு கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அண்மையில் நிதி மற்றும் சட்ட ஆலோசகர்களை நியமித்தது.