வாக்னர் குழுவிற்கு நிதி ; அமெரிக்கா விதித்த தடை!
வாக்னர் குழுவிற்கு நிதி வழங்குவதற்காக சட்டவிரோத தங்கவர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள குழுக்களிற்கு எதிராக அமெரிக்கா தடைகளை அறிவித்துள்ளது.
அதன்படி ரஸ்யா மத்திய ஆபிரிக்க குடியரசு ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள நான்கு தங்கநிறுவனங்களிற்கு எதிராக அமெரிக்க திறைசேரி தடைகளை அறிவித்துள்ளது.
வாக்னர் குழு ஈவிரக்கமற்ற நடவடிக்கை
இந்த நிறுவனங்களிற்கு வாக்னர் குழுவின் தலைவருடன் தொடர்புள்ளதாக அமெரிக்கதிறைசேரி அறிவித்துள்ளது. அதேசாமயம் வாக்னர் கூலிப்படையினர் தங்கள் அமைப்பிற்கு நிதிவழங்கி அதனை விஸ்தரிப்பதற்கு இந்த சட்டவிரோத தங்க நிறுவனங்கள் உதவுகின்றன என அமெரிக்க திறைசேரி தெரிவித்துள்ளது.
அத்துடன் மத்திய ஆபிரிக்க குடியரசு போன்ற நாடுகளின் வளத்தை தனது சுயநலத்திற்காக பயன்படுத்துவதன் மூலம் வாக்னர் குழு தனது ஈவிரக்கமற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது என பயங்கரவாதம் நிதி புலனாய்விற்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் பிரையன் நெல்சன் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது வாக்னர் குழுவிற்கு நிதி கிடைக்கும் வழிகளை அமெரிக்கா தொடர்ந்தும் இலக்கு வைக்கும் எனவும் உதவி இராஜாங்க செயலாளர் பிரையன் நெல்சன் தெரிவித்துள்ளார்.