இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள ஜீ.7 நாடுகள் அமைப்பு
பொருளாதார வல்லரசு நாடுகளின் அமைப்பு என கருதப்படும் ஜீ.7 நாடுகள் இலங்கைக்கு கடன் நிவாரணத்தை வழங்கும் முயற்சிக்கு உதவ தீர்மானித்துள்ளது.
கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை அங்கத்துவமாக கொண்ட ஜீ.7 நாடுகளின் நிதியமைச்சர்கள் நேற்று ஜேர்மனியில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் வெளியிட்ட அறிக்கையில் இதனை கூறியுள்ளனர்.
கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இலங்கை கடந்த புதன் கிழமை முதல் கடனை திரும்ப செலுத்த முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலைமை மற்றும் அத்தியவசிய பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள மக்களின் கஷ்டங்களை கவனத்தில் கொண்டு பொருளாதார வல்லரசு நாடுகள் இந்த உதவியை செய்ய முன்வந்துள்ளன.
இலங்கையின் கடன் நெருக்கடிக்கு நீண்டகால தீர்வை காண்பதற்கு ஜீ.7 நாடுகள் அமைப்பு அர்ப்பணிப்புடன் பங்களிப்பை வழங்கும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கைக்கு கடன் நிவாரணத்தை வழங்கவும் ஜீ.7 நாடுகள் தயாராகி வருகின்றன.