எரிபொருளுக்கு வரி குறைப்பு: மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட கனேடிய மாகாண முதல்வர்
ஒன்ராறியோவில் எரிபொருள் விலையில் 5.7cents அளவுக்கு வரி குறைக்க இருப்பதாக மாகாண முதல்வர் டக் ஃபோர்டு தெரிவித்துள்ளார்.
இந்த விலை குறைப்பானது அடுத்த ஆண்டு மாகாண நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கு முன்னர் அமுலுக்கு கொண்டுவரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்ராறியோ மாகாண அரசாங்கத்தால் கடந்த வாரம் வெளியிடப்பட்ட பொருளாதார அறிக்கையில், முதல்வர் ஃபோர்டு தமது 2018 தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்ட எரிபொருள் வரி குறைக்கப்படும் என வாக்குறுதியளித்ததைக் குறிப்பிடவில்லை.
ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் புதன்கிழமை கருத்து தெரிவித்துள்ள முதல்வர் டக் ஃபோர்டு, தமது நிலைப்பாட்டில் தாம் உறுதியாக இருப்பதாகவும், அடுத்த ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்னர் எரிபொருள் விலையில் மாற்றம் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் பெடர்ல் நிர்வாகமும் ஒத்துழைத்தால் பெருமளவுக்கு வரியை குறைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2018 தேர்தல் பிரச்சாரத்தின்போது எரிபொருள் விலையில் 10cents அளவுக்கு குறைக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என டக் ஃபோர்டு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது மீண்டும் வாக்குறுதி அளித்துள்ளதுடன், மாகாணத்தின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யவிருக்கும் மார்ச் 31ம் திகதிக்கு முன்னர் இந்த எரிபொருள் விலை குறைப்பு அமுலுக்கு வரும் என டக் ஃபோர்டு தெளிவுப்படுத்தியுள்ளார்.