புத்துருவாக்கம் செய்யப்படும் காசா; அராபிய தலைவர்கள் இணக்கம்
இஸ்ரேல் - ஹமாஸ் மோதலில் உருக்குலைந்த காசாவை, புத்துருவாக்கம் செய்ய அராபிய தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
அதன்படி பொதுமக்களை காசாவிலிருந்து வெளியேற்றாமல் காசாவை புனரமைக்கும்திட்டத்தினை அராபிய தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். எகிப்திய தலைநகரில் இடம்பெற்ற அராபிய தலைவர்களின் உச்சி மாநாட்டில் இது குறித்து இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.
53 பில்லியன் - இரண்டுலட்சம் வீடுகள்
53 பில்லியன் டொலர் செலவில் இரண்டுலட்சம் வீடுகளை அமைக்கும் திட்டத்திற்கே அராபிய தலைவர்கள் இணக்கம்தெரிவித்துள்ளனர். எகிப்து இந்த திட்டத்தினை முன்வைத்த நிலையில் எகிப்தின் திட்டம் தற்போது அராபிய திட்டம் என அராபிய லீக்கின் செயலாளர் நாயகம் அஹமட் அபொல் கெய்ட் தெரிவித்துள்ளார்.
அராபிய உலகை அச்சத்திற்குள்ளாக்கிய அமெரிக்க ஜனாதிபதியின் திட்டத்தினை எதிர்கொள்வதற்காக எகிப்து மரங்கள் நிறைந்த சுற்றுப்புறங்கள் மற்றும் பிரமாண்டமான பொதுகட்டிடங்கள்காணப்படும் காசாவை காண்பிக்கும் படங்களை உள்ளடக்கிய 91 பக்க வரைபடமொன்றை தயாரித்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் இந்த திட்;டம் குறித்து விபரங்கள்; வெளியாகலாம் என டெலிகிராவ் தெரிவித்துள்ளது. காசாவை புனரமைக்கும்திட்டத்தை முன்னெடுப்பதற்காக தொழில்நுட்ப வல்லுனர்களின் தற்காலிக குழுவொன்று நியமிக்கப்படலாம் என டெலிகிராவ் யுகே தெரிவித்துள்ளது.
ஹமாசினை இந்த குழுவிற்குள் உள்வாங்குவது குறித்து அராபிய தலைவர்கள் ஆர்வம் காட்டவில்லை பாலஸ்தீன அதிகார சபையின் கீழ் இந்த நிபுணர்கள் குழு செயற்படும் என டெலிகிராவ் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீன அதிகாரசபை தற்போது மேற்குகரையை நிர்வகித்து வருகின்றது. காசாவை அபிவிருத்தி செய்யும் திட்டம் மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படும்.முதல் கட்டம் ஆரம்ப மீட்பு நிலை என அழைக்கப்படுகின்றது.
இந்த கட்டத்தில் முதல் ஆறு மாதங்களிற்கு காசாவில் உள்ள மிகப்பெருமளவு இடிபாடுகளையும் வெடிக்காதவெடிபொருட்களையும் அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
அதேவேளை அடுத்த இரண்டு கட்டங்களும் பல வருடங்களிற்கு நீடிக்கும் என்றும் இக்காலப்பகுதியில் தற்காலிகமாக இடம்பெயர்ந்துள்ள 15 மில்லியன் பாலஸ்தீனியர்கள் தற்காலிக இடங்களில் குடியமர்த்தப்படுவார்கள் எனவும் கூறப்படுகின்றது.