ஏஞ்சலா மெர்க்கல் தொடர்பில் ஜேர்மானியர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு!
ஜேர்மனியின் முன்னாள் சேன்சலர் ஏஞ்சலா மெர்க்கல்(Angela Merkel) மீண்டும் பதவிக்கு வருவதை பெரும்பாலான ஜேர்மானியர்கள் விரும்பவில்லை என கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
ஜேர்மனியின் முதல் பெண் சேன்சலராக பொறுப்பேற்றவர் ஏஞ்சலா மெர்க்கல்(Angela Merkel) . 2005ம் ஆண்டு பொறுப்பிற்கு வந்த மெர்க்கல், 16 ஆண்டுகள் சேன்சலர் பொறுப்பை நிர்வகித்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓலாஃப் ஷோல்ஸ் புதிய சேன்சலராக பொறுப்பெற்றார். இந்த நிலையில் Funke Media குழுமத்திற்காக Civey என்ற நிறுவனம் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது.
கடந்த மாதம் 24ம் திகதி, மொத்தம் 5,003 மக்களிடம் ஜேர்மனியின் சேன்சலர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு 16 ஆண்டுகள் சேன்சலராக பதவி வகித்த ஏஞ்சலா மெர்க்கலை(Angela Merkel) மீண்டும் பதவியில் அமர்த்த தாங்கள் விரும்பவில்லை என 71 சதவீதம் பேர் பதிலளித்தனர்.
தற்போதைய சேன்சலர் ஓலாஃப் ஷோல்ஸை(Olaf Scholz) விட, மெர்க்கல் சிறந்த வேலையைச் செய்ததாக 43 சதவீதம் பேர் தெரிவித்தனர்.
ஜேர்மனியின் கிழக்குப் பகுதியில் மேற்கில் இருப்பதை விட மெர்க்கலுக்கு அதிக புகழ் இருப்பதாக தெரிய வந்துள்ளது. கருத்துக்கணிப்பின்படி, கிழக்குப் பகுதியில் கணக்கெடுக்கப்பட்டவர்களில் 52 சதவீதம் பேர் ஷோல்ஸை விட மெர்க்கலுக்கு அதிக ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் நாட்டின் மேற்கு பகுதியில் 42 சதவீதம் பேர் மட்டுமே அவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.