ஜேர்மன் கத்திக்குத்து தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவரும் பெண்களே..காரணம் என்ன?
ஜேர்மனின் வுவர்ஸ்பேர்கில் கத்திக்குத்துக்கு இலக்கான அனைவரும் பெண்கள் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐந்து பெண்கள் காயமடைந்துள்ளனர்.
கத்திக்குத்தை மேற்கொண்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் 24 வயதுடைவர் என்பதுடன் இவர் சோமாலியில் இருந்து குடியேறியவர் என தெரிவித்த அதிகாரிகள் கடந்த காலத்தில் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும் கூறியுள்ளனர். சம்பவத்துடன் குறித்த நபர் மாத்திரம் தொடர்புப்பட்டிருப்பார் என்றும் இதில் இஸ்லாமிய பின்னணி இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதாக பிராந்திய உள்விவகார அமைச்சர் ஜொயெச்சிம் ஹேர்மன் ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.
ஏனெனில் சம்பவத்தை கண்ட சாட்சியின் கருத்துப்படி முதல் பெண் மீது கத்திக்குத்தை நடத்தும் போது சந்தேகநபர் “அல்லாஹு அக்பர்” என கூறியுள்ளதாக ஹேர்னர் தெரிவித்துள்ளார். இது குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காயமடைந்த பெண்களில் சிறுபிள்ளையொன்றும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்தேகநபரின் கைத்தொலைபேசி பொலிஸாரால் கைப்பற்றபட்டதுடன் அதில் வெறுக்கத்தக்க குறுந்தகவல்கள் காணப்பட்டதாகவும் இவர் பெண்களை மாத்திரம் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தினரா என்பதில் தெளிவு இல்லை என்றும் பொலிஸ் தலைமை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
வறுமை மற்றும் யுத்தம் காரணமாக மில்லியன் கணக்கான குடியேறிகள் மற்றும் அகதிகளுக்கு தமது எல்லையை ஜேர்மன் திறந்தது.இந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு முதல் சந்தேகநபர் வுவர்ஸ்பேர்க் நகரில் வசித்து வருவதாக தெரியவந்துள்ளது.
சகபாடிகளுடன் மோதலில் ஈடுபட்ட போதெல்லாம் இவருக்கு உளநல வைத்தியத்தின் தேவை பரிந்துரைக்கப்பட்டிருந்தாக கூறப்படுகின்றது.