4 வயது சிறுமியின் மர்ம மரணம்: வழக்கு தொடர்ந்த ஒன்ராறியோ குடும்பம்
ஒன்ராறியோவில் தந்தையுடன் மலையேற சென்ற சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், தற்போது சிறார் சேவைகளுக்கான அமைப்பு மீது குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
ஒன்ராறியோவின் வாகன் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி Keira Kagan கடந்த 2020 பிப்ரவரி 9ம் திகதி மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த நிலையில் சிறுமியின் தாயார் Jennifer Viater, தமது மகள் திட்டமிட்டே படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவத்தின் போது தற்கொலை செய்து கொண்ட அவரது தந்தையே காரணம் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
சம்பவத்தன்று தந்தையும் மகளும் ஒன்றாகவே மலையேறும் பயிற்சிக்கு சென்றுள்ளனர். மகளை தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது தொடர்பில் தம்பதியர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இந்த மர்ம மரணம் நிகழ்ந்துள்ளது.
தமது மகளின் உயிருக்கு சிக்கல் இருப்பதை அறிந்திருந்தும் கனடாவில் உள்ள யூதர்களுக்கான குடும்ப நலம் மற்றும் சிறார்களுக்கான அமைப்பு அதை கண்டுகொல்லவில்லை என Jennifer Viater தற்போது குற்றஞ்சாட்டியுள்ளார்.
தந்தையால் சிறுமிக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்தும் அவர்கள் துரித நடவடிக்கை முன்னெடுக்க முயலவில்லை என கூறி 16 மில்லியன் டொலர் இழப்பீடு கேட்டு Jennifer Viater தற்போது வழக்கு தொடர்ந்துள்ளார்.
Jennifer Viater மற்றும் ரோபின் பிரவுன் தம்பதி 2013ல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு 2015ல் Keira Kagan பிறந்துள்ளார். ஆனால், தமது கணவர் பிரவுன் தொடர்பில் தாம் பாலியல் ரீதியாகவும், உடல் மற்றும் உளவியல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டு வந்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் 2016ம் ஆண்டு இருவரும் பிரிந்துள்ளனர். ஆனால் அதே ஆண்டு ஜூலை மாதம் மருத்துவரை சந்திக்க குழந்தையுடன் சென்ற நிலையில், ரோபின் பிரவுன் தமது பிள்ளையை பறித்துக் கொண்டு மாயமாகியுள்ளார்.
தொடர்ந்து 8 நாட்கள் குழந்தையை காண தாயாரை அனுமதிக்கவில்லை. இதுபோன்று பலமுறை நடந்து கொண்டுள்ளார் ரோபின் பிரவுன்.
இந்த நிலையில், 2020 பிப்ரவரி 9ம் திகதி Rattlesnake Point-ல் இருந்து தந்தையும் மகளும் சடலமாக மீட்கப்பட்டனர்.
உடற்கூராய்வில், சிறுமியின் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாகவே மரணமடைந்துள்ளது தெரிய வந்தது. இந்த வழக்கிலேயே தற்போது Jennifer Viater இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.