தவறுதலாக பிளீச்சிங் பவுடரை சாப்பிட்ட 5 வயது சிறுமி; நேர்ந்த துயரம்
தமிழகத்தின் தென்காசி மாவட்டதில் சிறுமி ஒருவர், பிளீச்சிங் பவுடரை தவறுதலாக சாப்பிட்டதால் எலும்பும் தோலுமாக மாறியுள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீதா ராஜ் என்ற நபர், செங்கோட்டை அடுத்த மேலூர் பகுதியில் வசித்து வருகிறார். கூலித் தொழிலாளியான இவருக்கு, பிரேமா என்ற மனைவியும், 5 வயது இசக்கியம்மாள் என்ற பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, இசக்கியம்மாள் பக்கத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு வைத்திருந்த பிளீச்சிங் பவுடரை எதோ உணவு பொருள் என்று நினைத்து எடுத்து சாப்பிட்டடுள்ளார். இதனால் சிறுமிக்கு தாங்க முடியாத வயிற்று வலி, நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் பதறிப்போன சிறுமியின் பெற்றோர், மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டிற்கு திரும்பி வந்த போது, உணவு, தண்ணீர் உட்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வந்திருக்கிறார்.
இதனால் உடல் எடை குறைந்து குழந்தை எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கிறாள். பிளீச்சிங் பவுடரில் உள்ள குளோரின் உடலுக்குள் ஹைட்ரோகுளோரிக், ஹைப்போகுளோரஸ் அமிலங்களை உருவாக்கி, (hydrochloric acid and hypochlorous acid) செரிமானத் தடத்தை பாதிக்கும் என்றும் நெஞ்சு எரிச்சல், வயிற்று வலி, தொண்டை வலி ஏற்பட்டு உணவை உட்கொள்ள முடியாத நிலையை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
கழிவறை, குளியலறை உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்தப்படும் பிளீச்சிங் பவுடர்கள், பினாயில் போன்றவை வீடுகள் தோறும் புழக்கத்தில் உள்ளவை.
இவற்றை குழந்தைகளுக்கு எட்டாத இடங்களில் பாதுகாப்பாக வைப்பதே இதுபோன்ற விபரீதங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும்.