கோட்டாபய அரசாங்கம் தொடர்பில் அமெரிக்க தூதுவர் முக்கிய தகவல்
இலங்கைக்கு உதவிகளை வழங்குவதற்காக, சில நாடுகள், இலங்கையில் மாற்று அரசாங்கம் வரும் வரை காத்திருப்பதாக கூறப்படுவது தவறானது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.
தனது இல்லத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் குழுவுடன், நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு உதவிகள் தேவைப்படும் இந்த நேரத்தில் சர்வதேச சமூகம், உதவிகளை நிறுத்துவதாக தவறான தகவல் வெளியாகி இருப்பதாக தூதுவர் தெரிவித்துள்ளார். இலங்கை மக்களுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கிறது.
பெரும்பாலான நாடுகளும் கூறுகின்றன. எனவே ஜனாதிபதி நாற்காலி அல்லது பிரதமர் நாற்காலியில் யார் அமர்கிறார்கள் என்பதைப் பொறுத்தே தமது ஆதரவு அமையாது என்று அவர் கூறினார்.
எரிபொருள் வரிசையில் நிற்பது அரசாங்கமோ அமைச்சர்களோ அல்ல. எனவே பாதிக்கப்படக்கூடிய மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதே தங்களின் கடமை என்றும் அவர் கூறினார்.
Pleased to meet with these Sri Lankan journalists to discuss US support for SL’s efforts to address the economic crisis, our many initiatives aimed at promoting prosperity and inclusive governance in SL, and our unwavering commitment to free speech and an independent press. pic.twitter.com/5vwPontv56
— Ambassador Julie Chung (@USAmbSL) July 7, 2022
இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்த கேள்விக்கு பதிலளித்த தூதுவர்,அரசியல் சீர்திருத்தங்களும் பொருளாதார சீர்திருத்தங்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. ஆகவே அவை இணையாக செல்ல வேண்டும் என குறிப்பிட்டார்.
அமெரிக்கா தனிநபரையோ, தனிக் கட்சியையோ அல்லது அரசியல்வாதியையோ ஆதரிப்பதில்லை. இலங்கை மக்களுக்கு ஆதரவளிக்க விரும்புகிறது.
பொருளாதார நெருக்கடியைப் பற்றிக் குறிப்பிடுகையில், கடன் மறுசீரமைப்புத் தேவைகள் உள்ள ஒரு நாட்டிற்கு எந்தவொரு சர்வதேச வங்கியும் அல்லது அரசாங்கமும் கடன் வழங்காது என்பதால், சர்வதேச நாணய நிதியம் மாத்திரமே இலங்கைக்கான ஒரே வழி என அவர் தெரிவித்தார்.
ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைப் பெறுவதில் இலங்கையின் ஆர்வம் குறித்து, அமெரிக்காவின் நிலைப்பாட்டை வெளியிட்ட அவர், ரஷ்யாவின் எண்ணெயைப் பெறும் மூன்றாவது நாடுகள் மீது தனது நாடு தடைகளை விதிக்கவில்லை என கூறினார்.
Millennium Challenge Corporation (MCC) இலிருந்து நிதி உதவி பெறுவதற்கு இலங்கைக்கு இன்னுமொரு வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டதற்கு,எதிர்காலத்தில் ஒரு நாள், சில பரிசீலனைகள் இருக்கும் என்று தாம் நம்புவதாக அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்தார்.