கனடாவில் பெண்ணை தாக்கிய கரடி சிக்கியது... கருணைக்கொலை செய்ய முடிவு
கனடாவின் ஆல்பர்ட்டாவில் பெண் ஒருவரைத் தாக்கியதாக நம்பப்படும் கரடி ஒன்று சிக்கியுள்ளது.
ஆல்பர்ட்டாவில், சென்ற வாரம் தனக்கு சொந்தமான இடம் ஒன்றைப் பார்வையிடச் சென்ற பெண் ஒருவர், மரங்கள் அடர்ந்த பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
அவரது உடல் பாதி புதைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால், கரடிகள் உணவுக்காக மனிதர்களைக் கொல்லுகிறதோ என்ற சந்தேகம் முதலில் வனத்துறை அலுவலர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில், அப்பகுதியில் கரடிகளுக்காக வைக்கப்பட்ட பொறியில் இரண்டு பெண் கரடிகள் சிக்கியுள்ளன.
அவற்றிடமிருந்து DNA மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதிக்கப்பட்டதில், அவற்றில் ஒன்றுதான் அந்த பெண்ணைக் கொன்றுள்ளது தெரியவந்தது.
அந்தக் கரடி இன்று கருணைக்கொலை செய்யப்பட உள்ளது, மற்றொரு கரடி வனப்பகுதிக்குள் விடப்பட உள்ளது.
ஆல்பர்ட்டாவைப் பொருத்தவரை, கரடிகள் தாக்குதல் அபூர்வமாகவே நிகழ்ந்துள்ளது.
என்றாலும், தற்போது அதிக அளவில் அப்பகுதியில் கரடிகள் காணப்படுவதால், மக்கள் கவனமாக இருக்குமாறு வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.