விலைவாசி தொடர்பில்... கனேடிய மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்கள்
இன்னும் பல மாதங்களுக்கு மளிகைக் கடைகளில் பொருட்களின் விலை அதிகரித்தே காணப்படும் என கனேடிய மக்களுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஹாலிஃபாக்ஸில் உள்ள டல்ஹவுசி பல்கலைக்கழகத்தை சேர்ந்த மூத்த நிபுணர் Sylvain Charlebois தெரிவிக்கையில், கடந்த ஜனவரி முதல் உணவுப் பொருட்களின் விலையில் மொத்தமாக ஐந்து சதவீதம் உயர்ந்துள்ளன.
ஆனால் சில பொருட்களை நீங்கள் கவனித்தால், அதன் விலையில் 20 முதல் 25 சதவீதம் வரையில் அதிகரிப்பு காணப்படலாம் என்றார். சர்வதேச அளவில் விலை உயர்வின் தாக்கம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது இன்னும் பல மாதங்களுக்கு உணவுப் பொருட்களின் விலை உயர்வில் இருந்தே உணர முடியும் என்றார்.
இதே கருத்தை கனடா வங்கியின் ஆளுநரும் முன்வைத்துள்ளார். எதிர்பார்த்ததை விடவும் கனேடிய மக்களை விலையுயர்வு பாதிக்கும் என குறிப்பிட்டுள்ள அவர், கடந்த ஆகஸ்ட் மாதம் 4.1 என இருந்த விலை உயர்வு தற்போது 4.4 சதவீதம் என அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த ஆண்டு இறுதியில் இது 5 சதவீதம் என்ற நிலையை எட்டும் எனவும் எச்சரித்துள்ளார். இந்த விலை உயர்வை மாமிசங்களின் விலையில் இருந்தே நாம் தெரிந்து கொள்ள முடியும் என்கிறார் Sylvain Charlebois.
மாட்டிறைச்சியின் விலை 50 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. கோழியின் விலை, பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முதல் மூன்று சதவிகிதம் அதிகரிக்கும். ஆனால் தற்போது முட்டை விலையைப் போலவே 13 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
பன்றி இறைச்சியும் விலை உயர்ந்தே காணப்படுகிறது என்றார்.
இதனிடையே, உலகளாவிய உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்து காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையும் தெரிவித்துள்ளது.