வெளிநாடு பயணப்படும் கனேடிய மக்கள் கவனிக்க வேண்டியவை...
கனடாவில் ஆகஸ்டு மாதத்தில் இருந்து வெளிநாட்டு பயணிகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாடு செல்லும் கனேடிய மக்கள் கவனிக்க வேண்டிய சில நிபந்தனைகள் வெளியாகியுள்ளது.
கனடாவில் தடுப்பூசி போடும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதால், மிக விரைவில் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அமெரிக்கர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு மக்களும் ஆகஸ்டு மாதம் முதற்கொண்டு உள்ளே வரலாம். ஆனால் வெளிநாடு பயணிக்கவிருக்கும் கனேடியர்கள் கண்டிப்பாக, செல்லவிருக்கும் நாட்டின் தற்போதைய விதிகளை அறிந்து கொள்வது மிக அவசியமானதாக உள்ளது.
முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட கனேடியர்கள் அமெரிக்காவில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் இந்திய தயாரிப்பான கோவிஷீல்டு தடுப்பூசி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளால் இன்னும் ஏற்கப்படவில்லை.
மட்டுமின்றி, கலப்பு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் அமெரிக்காவில் நுழைய முடியாது என்றே கூறப்படுகிறது. சாலை மார்க்கம் கனேடியர்கள் தற்போதைய சூழலில் அமெரிக்கா செல்ல முடியாது.
ஆனால் விமானத்தில் செல்லலாம், உரிய விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மேலும், அமெரிக்காவில் தற்போது நங்கூரமிட்டிருக்கும் சொகுசு கப்பல்களிலும், கலப்பு தடுப்பூசியுடன் பயணிகளை அனுமதிப்பதில்லை என அறிவித்துள்ளனர்.
முழுமையான தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே அனுமதி, மேலும் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி என்றால், அதே தடுப்பூசியில் இரு டோஸ்கள் போட்டிருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
கரீபியன் நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருக்கும் கனேடியர்கள் கலப்பு தடுப்பூசி என்றால், தற்போதைய சூழலில் பயணத்தை ரத்து செய்யலாம் என்றே அறிவுறுத்தப்படுகின்றனர்.
கரீபியன் நாடுகளில் கலப்பு தடுப்பூசி போட்டவர்களை அனுமதிக்க வாய்ப்பில்லை என்கிறார்கள், சென்றுவிட்டு ஏமாந்து திரும்பியவர்கள்.
ஆஸ்ட்ராசெனகாவின் இந்திய தயாரிப்பான கோவிஷீல்டுக்கு ஐரோப்பிய நாடுகளில் அனுமதி இல்லை என்பதால், கனேடியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதனால் இத்தாலி, போர்த்துகல், போலந்து மற்றும் ஜேர்மனிக்கு தற்போதைய சூழலில் கனேடியர்களால் பயணிக்க முடியாது. ஆனால், ஆஸ்திரியா, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் நாடுகள் கோவிஷீல்டு தடுப்பூசியை ஏற்றுக்கொண்டுள்ளன.
பிரித்தானியா செல்லும் கனேடியர்கள் மட்டும் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் தனிமைப்படுத்தல் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.