வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு;அச்சத்தில் டிரம்ப்
அமெரிக்கா வெள்ளை மாளிகைக்கு அருகே நேற்று (23) பிற்பகல் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பு வளையத்திற்குள் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் ஒருவரை, அமெரிக்க பாதுகாப்புப் படையினர் அதிரடியாக சுட்டுக் கொன்றுள்ளனர்.
வெள்ளை மாளிகையின் பிரதான பாதுகாப்பு வலயத்தை ஒட்டியுள்ள வீதியொன்றில் நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இதனால் அமெரிக்க இரகசிய உளவுத்துறை மற்றும் பொலிஸ் படையினர், உடனடியாகச் செயற்பட்டு அந்தப் பகுதியை முற்றுகையிட்டனர். இருதரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சமரில், சந்தேக நபர் படுகாயமடைந்தார்.
பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அந்த நபர், உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
சம்பவத்தின் போது, அருகிலிருந்த மற்றொரு பொதுமகனும் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிர்ஷ்டவசமாக பாதுகாப்புப் படை அதிகாரிகள் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
இச்சம்பவம் நடந்த வேளையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, வெள்ளை மாளிகையைச் சுற்றியுள்ள வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டு, வளாகத்தின் பாதுகாப்பு உச்சகட்டமாக பலப்படுத்தப்பட்டுள்ளது.